Title of the document


நாடு முழுவதிலும் பள்ளி மாணவர் களை ஆதார் எண் மூலம் தீவிர மாகப் பின்தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், மாணவர்கள் படிப்பை பாதியில் விடுவதைத் தடுக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. நாடு முழுவதிலும் அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தின் கீழ் சுமார் 15 லட்சம் பள்ளிகள் உள்ளன.
இவற்றில் சுமார் 26 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களில் பலருக்கு படிப்பை பாதியில் விடவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகளால் கண்காணித்து தடுக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையை போக்க மத்திய அரசு அவர்களின் ஆதார் எண்களைப் பதிவு செய்து 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதில் ஆதார் எண் இல்லாத குழந்தைகளுக்கு அதை அவர்கள் பெறும் வரை 18 இலக்கம் கொண்ட சிறப்பு எண் அளிக்கப்பட உள்ளது. இந்த எண்ணைப் பதிவுசெய்து குழந்தைகளைத் தீவிரமாகப் பின்தொடரும் பணியை, கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் (National University of Educational planning and Administration) செய்ய உள்ளது. இதற்கு, 'கல்விக்கான ஒருங்கிணைந்த - மாவட்ட தகவல் முறை (Unified -District Information System for Education (U-DISE)' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள்  கூறும்போது, 'தற்போது, பள்ளியில் சேரும் குழந்தைகள், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் உட்பட சில தகவல்கள் மட்டுமே மத்திய அரசால் தொகுக்கப்பட்டு வருகிறது. இந்தப் புள்ளி விவரங்களில் பள்ளியை பாதியில் விடும் குழந்தைகளின் விவரம் துல்லியமாக இருப்பதில்லை. எனவே இந்த விவரம் மற்றும் பிற குறைபாடுகளையும் புதிய திட்டத்தின் மூலம் அறிந்து அதை போக்கும் நடவடிக்கைகளை எடுப்பது எங்கள் திட்டம் ஆகும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது" என்று தெரிவித்தனர்.
 இந்த முறையை சண்டீகர் மற்றும் சில மாநிலங்கள் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிவைத்து தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதைத் கவனத்தில் கொண்ட மத்திய அரசு நாடு முழுவதிலும் தனது நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் பள்ளியை பாதியில் விடும் குழந்தைகள் விவரம், அவர்களின் பின்னணி, பள்ளிகளின் குறைபாடு உட்பட அனைத்து விவரங்களையும் தொகுத்து உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் படிப்பை பாதியில் விடுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். மத்திய அரசின் 2014-15 கல்வியாண்டு கணக்கெடுப்பின்படி தற்போது, நாடு முழுவதிலும் பள்ளியைப் பாதியில் விடும் குழந்தைகள் எண்ணிக்கை 18 சதவீதமாக உள்ளது. சுமார் 13 லட்சம் அரசுப் பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக உள்ளன. சுமார் 5 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது இதற்கு காரணம் ஆகும். பிளஸ் 2-க்கு பிறகு தற்போது 25 சதவீத மாணவர்கள் மட்டுமே உயர்கல்வியில் சேருகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post