Title of the document

வட்டெழுத்துகள் பிராமி எழுத்து எனப்படும் தாமிழி எழுத்து முறையில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. கி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துமுறையை பயன்படுத்துவது தொடங்கியது என்கிறார் அரசுப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு. ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.

பாரம்பரியம், கலாசாரம், தொன்மையான விஷயங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழர்களின் பழங்கால வரலாற்றை அறிந்து கொள்ள கல்வெட்டுக்கள் மிக முக்கிய காரணமாக உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார் பள்ளபச்சசோரியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி கோகிலா.

பழங்கால தமிழ் எழுத்து முறையான வட்டெழுத்து, பிராமி எழுத்து முறைகளான வட்டெழுத்து, பிராமி எழுத்து முறைகளை திறம்பட கற்றுத்தேர்ந்து சக பள்ளி மாணவிகளுக்கும் கற்பித்து வருகிறார்.

தற்போது தமிழ் எழுத்துகளையே பிழையின்றி எழுதப் படிக்க முடியாமல் பலர் தவிக்கும் போது, இவர் சர்வ சாதாரணமாக, சரளமாக கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகளை தெளிவாக வாசித்து அதில் உள்ள செய்திகளை அறிந்து மற்றவர்களுக்கு விளக்கம் கொடுத்து வருவது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக இவர் பிரத்தியேகமாக மதுரை மாவட்டம் நாகமலை, புதுக்கோட்டை பகுதிகளில் சமணர் படுகைகள் குகைகளில் காணப்படும் எழுத்துகளை குறிப்பெடுத்துள்ளார். தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் தனக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பிராமி, வட்டெழுத்த குறித்து கற்பிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

     கோகிலா, "தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் சேர்ந்து ஆர்வத்துடன் கல்வெட்டுகளை நகல் எடுத்து பழகினேன். அதில் உள்ள செய்திகள் பழந்தமிழர்களின் வரலாற்றினை தெரிவித்தன. பிராமி,வட்டெழுத்துக்கள் பயிற்ச்சிக்கான புத்தகத்தை வழங்கி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு ஊக்குவித்தார்.

மூன்று வாரத்தில் பிராமி, வட்டெழுத்துகளை எளிதாக வாசிக்கும் திறமையை பெற்றேன். இதனை சக மாணவிகளுக்கும் கற்பித்து வருகிறேன். கல்வெட்டுகளில் உள்ள வட்டெழுத்துக்களை வாசிப்பது கடினமானது. ஆனால் எனக்கு அது மிகவும் எளிமையானது. பள்ளி படிப்பில் முதல் மாணவி, விளையாட்டில் கபடி நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், ஓவியம் ஆகியவற்றில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது" என்று தெரிவித்தார்.

கோகிலாவின் தாய் ராமு கூறுகையில், "எங்களால் தனியார் பள்ளி கூடத்தில் படிக்க வைக்க வசதியில்லாததால் தான் அரசு பள்ளியில் படிக்க வைக்கிறேன். இப்படிப்பட்ட எழுத்துகள் இருப்பதாக எங்களுக்கு தெரியாது. ஆனால் என் மகள் அதனை கற்றுப் படிக்க எழுத தெரிந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
"கடந்த 2010ஆம் ஆண்டு முதல் எங்களது பள்ளியில் தொன்மை மன்றம் செயல் பட்டு வருகிறது. எங்களது மாணவர்கள் இப்பகுதிகளில் கிடைக்கும் பழங்கால தொல்லியல் பொருள்களை அதிகளவில் சேகரித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பழங்கால மொழி மற்றும் கலாசாரத்தின் மீது அதிக பற்று இருந்து வருவதன் வெளிப்பாடாகவே கோகிலா வட்டெழுத்துகளை படிக்க மிகவும் ஆர்வம் காட்டி தற்போது வட்டெழுத்துககை எழுதவும், படிக்கவும் நன்கு கற்று தேர்த்துள்ளார்" என பள்ளி தொன்மை மன்ற ஆசிரியர் ராஜ குரு தெரிவித்தார்.

இது குறித்து கோகிலாவின் வகுப்பாசிரியர் வரலட்சுமி கூறுகையில் "எங்கள் பள்ளியில் செயல்பட்டு வரும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் வாயிலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல பழங்கால பொருள்களை கண்டுபிடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் பழங்கால எழுத்துகளை கற்பதையும் எழுதுவதையும் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று தெரிவித்தார்.

தலைமையாசிரியர் செல்வராஜ் கூறுகையில், "எங்கள் பள்ளியில் 400 மாணவர்கள் படிக்கின்றனர். எங்களுக்கு மாணவர்களின் கல்வி அறிவு மேம்படுவது மட்டும் அல்லாது மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும் முயற்சித்து வருகிறோம். இதற்கும் அரசும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் மாணவி கோகிலா பழங்கால எழுத்துகளை கற்கவும் எழுதவும் மிகுந்த உதவிகரமாக இருக்கிறது" என்றார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post