Title of the document
இடைநிலை ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் (SSTA) இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று 28-06-2025 காலை 11 மணிக்கு திருச்சியில் No.1 டோல்கேட் பகுதியில் மேனகா மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

 01.06.2009 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 13 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 01.06.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ₹8370 என்றும் அதன்பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ₹5200 என்றும் “ஒரே பணி” “ஒரே கல்வித்தகுதி” “ஒரே பதவி” என அனைத்தும் ஒரே மாதிரி இருந்த போதிலும்    ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகளில் “சம வேலைக்கு” “சம ஊதியம்” வழங்க வேண்டும் என்பதை புறம்தள்ளி இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதை களையக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

         அதில் குறிப்பாக 2018-ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது நேரில் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக இப்பிரச்சனை களையப்பட வேண்டும் என அறிக்கை கொடுத்து எங்களுக்கு தோளோடு தோளாக நின்றார்கள். கடந்த அரசு இந்த கோரிக்கையை செய்யவில்லை. அதனால் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311 ல்  20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு” “சம ஊதியம்” வழங்கப்படும் என கோரிக்கையை இடம் பெறசெய்தார்கள்.

  புதிய அரசு பதவி ஏற்று நான்கு ஆண்டுகள்  முடிவடைந்த நிலையில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை விரைந்து செய்ய வேண்டும் என கடந்த 2022 டிசம்பர் மாதம் ஆறு நாட்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்போது  300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அப்போது தமிழக முதல்வர் 01.01.2023 இந்த புத்தாண்டில் முதல் அறிவிப்பாக  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களை கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

                      அக்குழு பல மாதங்கள் ஆகியும் அறிக்கையை விரைந்து கொடுப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. இதுவரை மூன்று முறை மட்டுமே குழு கூடியது. நான்காவது முறையாக குழு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்கதையாக நடந்து வருகிறது.
    2009-இல் பணியில் சேர்ந்தவர்கள் வயது மூப்பின் காரணமாக நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள். .பணிநியமனம் பெற்று  16 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகிறோம். இனியும் கால தாமதப்படுத்தாது மூன்று நபர்கள் குழுவின் அறிக்கையை அரசிடம்  அளித்து ஊதிய முரண்பாட்டை விரைந்து கொடுக்க வலியுறுத்தும் விதமாக எங்களது இயக்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

 அதன்படி:;
★ முதல் கட்டமாக 2009-க்கு  பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலத்தில் பணிபுரியும்  சக இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை வழங்க கோரி ஜூலை மாதம் 19ம் தேதி மாவட்ட அளவில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்.

★ இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் 02/08/2025 , 09/08/2025, 23/08/2025 மற்றும் 30/08/2025 என 4 மண்டலங்களில்  போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெறும்.

★ அதன் பின்னரும் அரசு எங்களது ஒற்றைக்கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால்  மாணவர் நலன் பாதிக்கப்படாமல் செப்டம்பர் மாத இறுதியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தை   நடத்துவது என்றும் கோரிக்கை முடியும் வரை சிறையில் இருந்து வெளியேறுவதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதி -311 ஐ  விரைந்து நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
                                                                                       நன்றி !
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post