பழைய பென்ஷன் திட்டம்: தலைமைச் செயலாளரை சந்தித்த அரசு ஊழியர்கள் – பேசியது என்ன?
பழைய பென்ஷன் திட்டம் மீட்பு கோரிக்கையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் – தலைமைச் செயலாளருடன் சந்திப்பு!!
2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வாக்குறுதி எண் 309-ன் அடிப்படையில், புதிய பென்ஷன் திட்டம் (CPS) ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், பழைய பென்ஷன் திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் கடந்த மே 5ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, கோவை வாலையாறு, ராமநாதபுரம் தனுஷ்கோடி ஆகிய இடங்களில் இருந்து இருசக்கர வாகனங்களில் பிரச்சாரப் பேரணியைத் தொடங்கினர்.
இந்த பேரணி மே 16 அன்று சென்னை நகரை வந்தடைந்தது. அன்றைய காலை, பேரணி நந்தனத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி நகர்ந்தது. அங்கு, சிபிஎஸ் ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகுமார், ஜெயராஜ் ராஜேஸ்வரி, பிரெடெரிக் ஏங்கல்ஸ், வெண்மதி, கண்ணன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் தலைமைச் செயலாளர் முருகானந்தை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கைகளை விளக்கி மனுவை வழங்கினர்.
அவர்கள் மனுவில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று குறிப்பிட்டு, இதுவரை OPS அமலாக்கம் நடைபெறாததை கண்டித்தனர். மேலும், மேற்கு வங்கத்தில் CPS முறை அமலாக்கப்படாததையும், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் OPS மீண்டும் கொண்டு வரப்பட்டதையும் எடுத்துக்காட்டினர்.
மேலும், மத்திய அரசு மற்றும் தமிழகத்தைத் தவிர்ந்த பிற மாநிலங்களில் அரசு ஊழியர்கள் சந்தை மதிப்பின் அடிப்படையில் ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகியவை பெறுவதாகவும், ஆனால் 2002-ம் ஆண்டிலிருந்து தமிழக அரசு ஊழியர்கள் இதிலிருந்து வஞ்சிக்கப்படுவதாகவும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் மே 5 முதல் மே 16 வரை மூன்று வழித்தடங்களில்—கன்னியாகுமரி, கோவை, ராமேஸ்வரம்—இருசக்கர வாகன மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், CPS திட்டத்தை உடனடியாக ரத்து செய்து OPS முறை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
சந்திப்பின் போது சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் சுமார் 10 நிமிடங்கள் தங்களது கோரிக்கைகளை விளக்கியதையடுத்து, புதிய பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நல்ல அறிவிப்பு வரும் எனவும் தலைமைச் செயலாளர் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மேலும் தகவலுக்கு பொதுமக்களும், அரசு ஊழியர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
எப்போ பார்த்தாலும் இதே பதில் சொல்லி காதில் பூ சுற்றுகிறார்கள்
ReplyDeletePost a Comment