Title of the document

கவுரவ விரிவுரையாளர்கள் (Guest lectures) 5 மாதமாக சம்பளமின்றி தவிப்பு 


கொரோனா ஊரடங்கு விடுமுறையால், அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், ஐந்து மாதமாக சம்பளம் வழங்காததால், வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள, 113 அரசு கல்லுாரிகளில், இரு, 'ஷிப்ட்'களில், 4,084 கவுரவ விரிவுரையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், மாதம், 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில், கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டதால், உயர்கல்வித்துறை நிர்வாகம், ஏப்ரலில் இருந்து ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கு, சம்பளம் வழங்கவில்லை. இதனால், கவுரவ விரிவுரையாளர்கள், குடும்பம் நடத்த வழியின்றி தவித்து வருகின்றனர்.

அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்க மாநில தலைவர் வி.தங்கராஜ் கூறியதாவது: ஏப்ரல், மே மாதங்களில் விடைத்தாள் திருத்தும் பணி மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்வாதாரத்தை நடத்தினோம். தற்போது தேர்வும் ரத்து செய்யப்பட்டதால், ஐந்து மாதமாக சம்பளமின்றி தவிக்கிறோம்.எங்களுக்கென யு.ஜி.சி., நிர்ணயித்த சம்பளம், 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். விரைந்து ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.'ஆன்லைன்' கல்வி பாதிப்புதமிழகத்தில், 109 அரசு கலைக்கல்லுாரிகளில், 5,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. 2020 ஜனவரியில், டி.ஆர்.பி., மூலம், 2,300 உதவி பேராசிரியர்கள் நிரப்ப அரசாணை வெளியிட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பித்தோரின் சான்றிதழ் சரிபார்த்து, தகுதிக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கி, நேர்முக தேர்வு நடத்தி நியமிக்க வேண்டும். கொரோனாவால் நியமன பணிகள் தடைபட்டன.அரசு கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்கிறது. 'ஆன்லைன்' வகுப்பு, காலை, 9:30 முதல் மாலை, 4:30 மணிவரை நடத்த அனுமதிக்கப்பட்டுஉள்ளது. உதவி பேராசிரியர்கள் பற்றாக்குறையால், 4:00 மணிநேரம் மட்டுமே வகுப்பு நடத்தப்படுகிறது. மாணவர்கள் கல்வி பாதிக்காத வகையில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கைள் தொடரவும், தகுதியானவர்களை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post