Title of the document

மகளைப் பள்ளிக்கு கூட்டிச்செல்லும் அப்பா தினம் ஒரு கடையின் பெயரைப் படிக்கச் சொல்கிறார்... ஏன் தெரியுமா?

தினமும் இருசக்கர வாகனத்தில் தன் மகள் அனுஷாவைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் அந்த அப்பா, ஒரு வித்தியாசமான விஷயத்தைச் செய்கிறார். மகள் படிப்பது இரண்டாம் வகுப்பு. சாலையில் செல்லும்போது ஏதாவது ஒரு கடையின் பெயர்ப்பலகையைப் படிக்கச் சொல்வார்.




பின்னர், அந்தக் கடையில் நடக்கும் வேலைகள், அதற்கான பொருள்கள், தயாரிக்கும் முறை என்று சொல்லிக்கொண்டே போவார். முக்கியமாக, அந்த வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் பற்றி நிறைய சொல்வார்.உதாரணமாக ஒரு தேநீர் கடை...

"எனக்குத் தெரிஞ்சு இவர் இங்கே 10 வருஷமா கடை வெச்சிருக்கார். தினமும் காலையில் 6 மணிக்கே திறந்துவிடுவார். அதுக்காக, 5 மணிக்கே எழுந்து வந்துவிடுவார். ராத்திரி 10 மணி வரைக்கும் கடை இருக்கும். ஒரு நாளில் 16 மணி நேரம் வேலை செய்கிறார்.

அதுல முக்கால்வாசி நேரம் நின்னுகிட்டேதான் இருப்பார். நீ கிளாஸ்ல உட்கார்ந்துப்பே. நானும் ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை செய்வேன். ஆனா, இவர் உட்கார்ந்து செய்ய முடியாது. நின்னுட்டே செஞ்சாதான் வேலை நடக்கும்.

ஒரு குறிப்பிட்ட நேரத்துல கூட்டம் அதிகமா இருக்கும். அந்த நேரத்துல யாரையும் அதிகம் காத்திருக்க வைக்காம சுறுசுறுப்பா டீ கொடுக்கணும். டேஸ்ட்டும் நல்லா இருக்கணும்.'' இப்படி ஆரம்பித்து, அதில் வரும் வருமானம், சவால்கள் எனச் சொல்வார். அனுஷாவும் இடையிடையே நிறைய கேள்விகள் கேட்பாள்.

அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியவாறு அழைத்துச் செல்வார். ஒரு நாள் வகுப்பில் ஒரு பாடம் நடத்தும்போது நடந்த உரையாடலில், பூ விற்பவர் பற்றிய பேச்சு வந்தது. உடனே எழுந்த அனுஷா, அதுபற்றி தனக்குத் தெரிந்ததை அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டே போனாள்.

அது வெறும் தகவல்களை... அறிவை வெளிப்படுத்துவதாக மட்டுமல்ல. ஓர் அற்புதமான குழந்தைப் பாடலை பாடுவதுபோல இருந்தது. அந்தத் தகவல்களுக்குள் ஒரு மனிதரின் வாழ்வியல் முறை, சக மனிதருடன் நமக்குள்ள தொடர்பு,

அவர்களின் முக்கியத்துவம் ஆகியவை வெளிப்பட்டன.நம் குழந்தைகளுக்குப் பள்ளியும் ஆசிரியர்களும் எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக்கொடுக்கட்டும். பெற்றோராகிய நாம் ஆசிரியராக மாறி, கற்றுக்கொடுக்க வேண்டியது இவைதான்.




நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு மனிதர்களை, அவர்களின் பணிகளை அவர்களுக்கு அறிமுகம் செய்வோம். அதேநேரம், எப்படிச் சொல்லிக்கொடுக்கிறோம் என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக, பொருளாதார ரீதியாக எளிய பணிகளைச் செய்பவர்களை நம் குழந்தைகளுக்கு நாம் எப்படி அறிமுகம் செய்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். "சரியா படிக்கலைன்னா இப்படித்தான் நீயும் கூலி வேலை செய்து கஷ்டப்படணும்'' என்கிறோம்.


அதாவது, குழந்தைகளுக்குள் பயத்தைப் புகுத்தி அதன்மூலம் பொறுப்பை உருவாக்க இதை ஓர் உத்தியாக நினைக்கிறோம். ஆனால், அப்படிச் சொல்வதால் அவர்களுக்குள் பயம் மட்டுமா உருவாகிறது?

அந்தப் பணியைத் தாழ்வாகவும், அதைச் செய்பவர்கள் மீது இயல்பாகவே மதிப்பும் குறைகிறது.இது சரியான வழிமுறையா? ஒர் அலுவலகத்தில் கழிவறையைச் சுத்தம் செய்பவர் ஒரு வாரம் வராவிட்டால் என்ன ஆகும்? இங்கே எல்லாப் பணிகளும் முக்கியமானவையே.

எல்லா மனிதர்களும் முக்கியமானவர்களே என்பதை நம் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.அதற்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களை எல்லாம் தவறாமல் பயன்படுத்தி நம் குழந்தைகளுக்கு வாழ்வியல் ஆசிரியராக மாற வேண்டும்.

ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருக்கும்போது, ஒரு வாகனத்தில் பயணிக்கும்போது, ஒரு கடைவீதியில் பொருள் வாங்கும்போது... இப்படி எங்கெல்லாம் மனிதர்களை, அவர்களின் பணிகளை, அதன் முக்கியத்துவத்தைச் சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் சொல்லுங்கள்.






அவர்களுக்குள் அறிவாக மட்டுமன்றி, மனிதநேயமாகவும் அதைப் பதியுங்கள். எது ஜாலி... எது உருவ கேலி... உங்க குழந்தைகளுக்கு வித்தியாசத்தை புரியவைங்க! பெற்றோராக நாம் எப்போது வெற்றியடைகிறோம் தெரியுமா? நம் குழந்தை வளர்ந்து பெரிய அலுவலகத்தில் பெரிய பதவியில் அமரும்போது அல்ல.

அந்த அலுவலகத்துக்குள் நடக்கும் முக்கியமான கலந்துரையாடலுக்காகப் பரபரப்பாகச் செல்லும்போது, வழியில் தரையைச் சுத்தம் செய்துகொண்டிருப்பதைக் கண்டால், அந்தக் கால்கள் தயங்கி நிற்க வேண்டும்.

சுத்தம் செய்பவரிடம் மன்னிப்புக் கேட்பது போன்ற ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, சற்றே ஒதுங்கியோ, பக்குவமாகவோ நடக்க ஆரம்பிக்க வேண்டும். அங்கேதான் பெற்றோராக நாம் வெற்றிபெறுவோம்!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post