Title of the document
அரசுப் பணியாளர்களில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளும், ஊதியமும் அடிநிலை ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, கீழடுக்குகளில் உள்ளோர் போராடும்போது, அதிகார அமைப்புகள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகத் தங்களின் பிரச்சாரங்களை முடுக்கிவிடுகின்றன. அதன் மூலம் அந்த வாய்ப்புகூடக் கிடைக்காத இதர பகுதி மக்களை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் வெற்றிபெற்றுவிடுகின்றன.

அரசு என்பது அமைச்சர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் மட்டுமல்ல; அரசின் எந்தவொரு திட்டத்தையும் அடிமட்டத்தில் செயலாக்குபவர்கள் ஊழியர்களே. கொள்கை வகுத்தலும், திட்டமிடுதலும், நிதி ஒதுக்குதலும் மட்டுமே அரசின் உயர்மட்டத்தில் நடைபெறுகின்றன. அமல்படுத்தும் முழுச் சுமையும் ஊழியர்கள் தலையிலேயே சுமத்தப்படுகிறது. உதாரணமாக, சுகாதாரத் துறையில் பல்வேறு அடுக்குகள் இருந்தபோதும், இறுதியாக ஒரு பகுதியைச் சுகாதாரமாக வைத்திருப்பது அங்குள்ள குப்பைகளையும், சாக்கடைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களே. அந்தப் பணியைச் செய்யவில்லை என்றால் திட்டமிடல், நிதி ஒதுக்குதல், கண்காணித்தல் என்கிற எந்த அடுக்கினாலும் பலன் இல்லை.



ஊழியர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் ஏராளமான அரசு ஊழியர்கள் தேவையின்றி இருப்பது போன்ற பிரச்சாரங்கள் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டுவருகின்றன. ஒரு நாட்டின் மக்கள்தொகைக்கும் ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதமே அந்த நாடு மேம்பட்ட சேவையை வழங்குகிறதா என்பதற்கான அளவுகோல். 2011-ம் ஆண்டுக் கணக்கின்படி இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 1,622.8 அரசு ஊழியர்கள் பணிசெய்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது குறைந்திருக்கக் கூடும். 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 7,681 பணியாளர்கள் சேவை செய்கின்றனர். மத்திய அரசுப் பணியாளர்களைப் பொறுத்தமட்டில் 2011-ம் ஆண்டு 24.63 லட்சம் பேர். மாநில அரசு ஊழியர்கள் 72.18 லட்சம் பேர். இந்த எண்ணிக்கையில் ரயில்வேயில் பணிபுரியும் 14 லட்சம் பேரும் அடங்குவர். அதாவது, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 125 மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள்.



சமூக மாற்றத்தில் அரசின் சேவையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் திறன் மிக முக்கியமானது. கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்ட நாடுகள் அல்லது மாநிலங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டால், அவற்றின் ஊழியர் விகிதம் அதிகமாகவே உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த மக்கள்தொகை ஏறத்தாழ 8 கோடி. தமிழகத்தில் உள்ள மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம். அதாவது, ஒரு லட்சம் பேருக்கு வெறும் 1,500 ஊழியர்கள் மட்டும்தான்.



நேரடியாக ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமானால் மாநிலங்களின் வளர்ச்சி, மனிதவளக் குறியீடு இவை உயர்ந்துவிடும் என்பதல்ல இதன் பொருள். அதேசமயம், இதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு என்பதை மறுக்க முடியாது. அரசின் அறிக்கைகள் பல நேரங்களில் மக்களைத் தூண்டும் வகையிலும், படித்தவர்களைக்கூடத் திசைதிருப்பும் வகையிலும் அமைந்துவிடுகின்றன. குறிப்பாக, போராட்டங்கள் நடைபெறும்போது கொடுக்கப்படும் புள்ளிவிவரங்கள், போராடுபவர்களுக்கு எதிரான பகையையும், வன்மத்தையும் உருவாக்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்படுகின்றன.



பொய்ப் பிரச்சாரம்

தமிழ்நாடு அரசின் வரவு - செலவுத் திட்டத்தில் 71% ஊழியர்களின் சம்பளத்துக்கே கொடுக்கப்படுகிறது என்கிற தோற்றத்தை உருவாக்குகிறது அரசு. உண்மையில், இந்தத் தொகை 50%-க்கும் குறைவாகும். 7-வது ஊதியக் குழு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000-மாவது இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதியன்று அரசு ஊழியர்களின் சம்பளம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது முதல்வர் பழனிசாமி புதிய சம்பள விகிதத்தின்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,000-த்திலிருந்து ரூ. 15,700 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.77,000-லிருந்து ரூ.2,25,000ஆகவும் உயரும் என்றும் அறிவித்தார்.

அதாவது, உயரதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு மாத ஊதிய உயர்வு, கீழ்நிலையில் உள்ள 15.4 பேரின் உயர்வுக்குச் சமமாகும். அதேபோல கீழ்நிலையில் உள்ள ஒருவரின் மாதச் சம்பளத்தைப் போல, மேல்நிலையில் உள்ள ஒருவருக்குக் கிடைத்த மாத உயர்வு மட்டும் 9.42 மடங்காகும். இந்த ஒரு உதாரணம் மட்டும் ஒட்டுமொத்த நிலைமையை உணர்த்துவதாக இருக்கும். ஆரம்ப நிலையில் கீழ்மட்டத்தில் இருக்கும் ஒருவரின் சம்பளமும், உயர்மட்டத்தில் இருக்கும் ஒருவரின் சம்பளமும் 1:14.33 என்ற விகிதத்தில் உள்ளது. இந்த மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுதான் ஒட்டுமொத்தமான சம்பள விகிதம் மிக அதிகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.



இதைப் பயன்படுத்தியே அதிகாரப் பணி நிலையில் உச்சத்தில் இருப்பவர்கள், கீழ்மட்டத்தில் இருப்பவரது நியாயமான கோரிக்கைகளை மறுக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையே சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அந்தச் சம்பள உயர்வில் குறிப்பிட்ட பகுதியை மறுப்பது ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும்போது ஜெயலலிதா தொடங்கியது. இதைத்தான் வழக்கம் என்று சொல்லி அமைச்சர் ஜெயக்குமார் நியாயப்படுத்துகிறார். ஊதிய உயர்வு அளிப்பது என்று முடிவுசெய்துவிட்ட பிறகு, ஒரு தேதியைக் குறிப்பிட்டு அதிலிருந்து ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்று பொதுவாக அறிவித்துவிட்டு, பல மாதங்கள் அந்த உயர்வுக்கான பணத்தைச் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்குக் கொடுக்காமல் இருப்பது ஏமாற்றமாகும். ஆரம்பத்தில் தனியார் முதலாளிகள் செய்த இத்தகைய நடவடிக்கையை வேடிக்கை பார்த்த அரசுகள் இப்போது தாங்களும் அதே காரியத்தைச் செய்வது கொடுமையானது.



மறுக்கப்படும் நிலுவைகள்

கடந்த 6-வது ஊதியக் குழு பரிந்துரையின்போது 12 மாதங்கள் அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகையைத் தர மறுத்த அரசாங்கம், அதே நடைமுறையை இந்த முறை 21 மாதங்களுக்கு நீட்டித்து நியாயப்படுத்தவும் செய்கிறது. ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் இந்த 33 மாத நிலுவைத் தொகையையும் பெற்றுவிட்டார்கள். தனியார் நிறுவனங்கள் போதுமான சம்பளம் தரவில்லை என்பதைத் தட்டிக்கேட்டுச் சரிசெய்ய வேண்டிய அரசாங்கம், அவர்கள் குறைவாகக் கொடுக்கிறார்கள், நாங்கள் அதிகமாகத் தருகிறோம் என்ற வாதத்தை முன்வைக்கிறது. போராடும் ஊழியர்களுக்கு எதிராகப் பொதுமக்களையும், இதர வேலை தேடும் பிரிவினரையும் தூண்டிவிடுகிறார்கள்.



இப்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையே. ஆனால், இதற்கு முழுக் காரணம் அரசு மட்டும்தான். உரிய காலத்தில் சம்பந்தப்பட்டவர்களோடு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். மாநில அரசின் இன்றைய நிதிநிலைக்குக் காரணம் மத்திய அரசு வரிவருவாயைப் பெரும் பகுதி அள்ளிக்கொண்டு போனதுதான். அதைக் கேட்பதற்கும், பெறுவதற்கும் செய்யாமல், அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மாநில அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post