Title of the document


பள்ளி மாணவர்களுக்கு 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தேர்ச்சி அளிக்கும் கொள்கை தொடர்பான இறுதி முடிவை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமே விட்டுவிடுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் தில்லியில் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், "8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை கடைப்பிடிக்கப்படுவதால் கல்வித் தரம் குறைகிறது. எனவே, 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெறவைப்பது தொடர்பாக இறுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்' என்று பல்வேறு மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜாவடேகர் கூறியதாவது: மாநில அரசுகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக உரிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும். அது வரை 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கை தொடர்பான இறுதி முடிவை மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளலாம்.
மாநிலக் கல்வி வாரியத்தில் ஏற்கெனவே 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு உள்ளது. அதேபோல மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திலும் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பான திட்டம் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும். மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தை அடிக்கடி நடத்த வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு கல்வித் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் அளிப்பதில் முதன்மையானது மத்திய கல்வி ஆலோசனை வாரியமாகும். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, விஜய் கோயல், மகேந்திர நாத் பாண்டே, உபேந்திர குஷ்வாஹா, 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள், மாநிலப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post