Title of the document
*கொரோனா நிவாரண நிதியும், வருமானவரியில் 80G-யும் !*

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

*தாராளபிரபுக்களான ஆசிரியர் & அரசு ஊழியர்களுக்கு வணக்கம்.*

'ஆசிரியர்களின் உதியத்தைப் புடிங்கோ!' எனும் கூக்குரல்களும் குறிப்பிட்ட ஒரு சித்தாந்த & அவர்தம் அடிமைப்படையால் பொதுப்புத்தியில் உமிழப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதை வெளிப்படையாகப் பொருட்படுத்தி மறுவினையாற்ற வேண்டிய சூழல் தற்போதில்லை. பொதுமக்கள் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டி நாமளிக்கும் பதில்களை அவர்தம் தற்போதைய சூழல் பொருட்படுத்தவும்விடாது. பொதுமக்கள் தவிர்த்த அடிப்படைவாதிகள் உண்மையை எந்நாளும் விளங்கிக் கொள்ள விரும்பவுமாட்டார்கள்.

முதல் அலையில் உங்களின் பங்களிப்பை உங்களது வட்டார / பள்ளி அமைவிடத்தின் மக்கள் நன்கு அறிந்திருப்பர். தற்போதைய பங்களிப்புகளை அவர்களும் மற்றவர்களும் அறிந்து கொள்ள *#TNTeachersPandemicSupports* என்ற ஹேஸ்டேக்கைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். 

இது போன்ற திட்டமிட்ட கொந்தளிப்புகளுக்கு, பெருந்தொற்றுக் கால பணி விபரங்களைவிட பங்களிப்புகளே நாம் தரும் ஆகச்சிறந்த பதில்!

கொரோனா பெருந்தொற்றின் தற்போதைய சூழலை எதிர்கொள்ளத் தாராளமாக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குக் கொடுத்துதவ வேண்டுமாறு தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிதி 100% வெளிப்படைத் தன்மையோடே கொரோனா நிவாரணப் பணிக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளதையடுத்து, முதல் அலையைப் போன்றே தற்போதும் நமது ஒரு நாள் ஊதியத்தை அரசு ஏற்றுக்கொண்டு ஜூன் மாதத்தில் பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது. 

முதல் அலையில் நாளிதழில் வாசித்த மரணச் செய்திகளை நாள்தோறும் நேரடியாக அறியும்படி கொடிதானதாக இரண்டாம் அலை உள்ள சூழலில், சுய & சுற்றத்தார் நலன் கருதி நமது பங்களிப்பை இன்னும் கூடுதலாக அளிக்க வேண்டிய தேவையுள்ளது. மூன்றாம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கும் நன்கொடையானது பிரிவு 80G-ன் கீழ் 100% வருமான வரிக் கழிவிற்கு உரியது. நாம் நிவாரண நிதிக்கு அளிக்கும் ரூ.5/- முதல் ரூ.16,412/- வரையிலான தொகையால் வருமான வரியே இல்லாததை உறுதி செய்யலாம். இதனால் ரூ.13,000/- வரை சேமிக்க இயலும். பொதுநலனிற்கு பொதுநலனுமாயிற்று, சேமிப்பிற்குச் சேமிப்புமாயிற்று.

யார் எவ்வளவு நிதி வழங்கலாம்?

80C உள்ளிட்ட அனைத்து வகையான சேமிப்புகள், Standard Deduction 50000, வீட்டுக்கடன் வட்டி உள்ளிட்ட கழிவுகள் போக வருமான வரி கணக்கீட்டிற்கான நிகர ஆண்டு ஊதியம் ரூ.5,00,005/- முதல் ரூ.5,16,412 வரை (அதாவது ஆண்டு வருமானம் தோராயமாக ரூ.7,70,000/- முதல் ரூ.9,70,000/- வரை) பெறுவோர், தாங்கள் செலுத்தும் வருமானவரியை விட குறைவான தொகையை நிவாரண நிதியாக அளித்து வருமான வரி விதிப்பிலிருந்து முழுமையான விலக்கு பெறலாம்.

குழப்பமா இருக்கோ. . . ? ஒன்னும் பிரச்சினையில்லங்க. உங்களுக்கான தோராய வருமான வரியைக் கணக்கிட்டு, அதிலிருந்து அளிக்க வேண்டிய நிவாரண நிதியைக் கணக்கிட இத்துடன் இணைத்துள்ள Excel File உங்களுக்கு உதவியாக இருக்கும்.

https://1drv.ms/x/s!AlYLTlV81nKDgTPUui0WD9uy1ehL

இதில், 'Fill Yellow Cells' என்ற Sheet-ல் மார்ச் மாத ஊதியம் மற்றும் தேவையான விபரங்களை மட்டும் உள்ளீடு செய்தால் போதும். '80G - CMPRF' Sheet-ல் ஒரு நாள் பிடித்தம் தவிர்த்து கூடுதலாக எவ்வளவு நிவாரண நிதி வழங்கலாம் என்பதைக் காட்டும்.

இக்கணக்கீட்டில், DA 17% என்ற நிலையிலேயே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அரசு அறிவிக்கவுள்ள 1 நாள் பங்களிப்பு ஜூன் மாத ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு தானியங்கி முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இக்கணக்கீடு தோராயமானதே! எனினும், வருமான வரவிலோ, வரிவிதிப்பிலோ இனி இந்நிதியாண்டில் பெரிதாக மாற்றங்கள் நிகழ வாய்ப்பு மிகமிகக் குறைவே.

இதில் காட்டும் தொகையைவிட அதிக தொகையை நிவாரண நிதியாக நம்மால் வழங்க இயலும் என்பதை முதல் அலையின் போதே நாம் செயல்படுத்திக் காட்டியுள்ளோம். மேலும், அப்போது நாம் வருமான வரி விலக்கு குறித்து பெரிதாகச் சிந்தித்திருக்க மாட்டோம்.

இப்பதிவின் நோக்கம். . . ஈராண்டு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, அகவிலைப்படி உயர்வுகள் உள்ளிட்டவற்றை இழந்திருந்தாலும் தொடர்ந்து நிவாரணநிதியளிக்க முன்வரும் உங்களது தாராள குணத்திற்கான சிறு வெகுமதியை 80G-ன் வழி பெற்றுக் கொள்ளலாம் என்பதைத் தெரியப்படுத்தித் தங்களின் பங்களிப்பை மேலும் அதிகப்படுத்துவதே!

*தாராளமாக நிதி வழங்குவோம்!*

*வெளியே சுற்றுவதைத் தவிர்ப்போம்!*

*மூக்கு & வாய்க்கு முகக்கவசமிடுவோம்!*

*கைகளைச் சுத்தமாக வைத்திருப்போம்!*

*இப்பெருந்துயரத் தொற்றிலிருந்து மீள்வோம்!*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post