Title of the document

பள்ளிகள் மூடப்பட்டதால் இந்தியாவுக்கு பெரும் இழப்பு! 


இந்தியாவில், பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில், 29.36 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். மாணவர்களின் திறனிலும் பாதிப்பு ஏற்படும்' என, உலக வங்கி எச்சரித்துள்ளது.


கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, நம் நாட்டில், மார்ச், 16ல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. அதன் பின், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. வரும், 15ம் தேதியில் இருந்து பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


இறுதி முடிவை, அந்தந்த மாநிலங்கள் எடுக்க, அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுகளால், தெற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, உலக வங்கி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது; அதில் கூறியுள்ளதாவது:

பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், மாணவர்கள் புதிதாக கற்க வேண்டியதை கற்க முடியாமல் போகிறது. ஏற்கனவே கற்றதில் சிலவற்றை மறக்கவும் வாய்ப்புள்ளது. 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அதை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.


ஒரு மாணவருக்கு கிடைக்கும் பள்ளி படிப்பு வாய்ப்பு மற்றும் அவர்கள் கற்றதை அடிப்படையாக வைத்து, 'லேஸ்' எனப்படும், பள்ளி கற்றல் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டில், இதுவரை, ஐந்து மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.அதனால், ஒரு மாணவரின், 'லேஸ்' எனப்படும், பள்ளி கற்றல் காலம், இந்தாண்டில், 0.5 புள்ளிகள் குறைகின்றன. இந்தியாவில், சராசரியாக ஒரு மாணவரின் கல்வி கற்கும் ஆண்டின் எண்ணிக்கை, 6.5 புள்ளிகளாக உள்ளது; அது, தற்போது, 6.0 புள்ளிகளாக குறைகிறது.


இதனால், ஒரு மாணவன், எதிர்காலத்தில் வேலை பார்க்கும்போது கிடைக்கும் வருவாயில், குறைந்தபட்சம், 3.22 லட்சம் ரூபாயை இழக்க நேரிடும். அதாவது, அந்த மாணவர் எதிர்காலத்தில் பெறும் மொத்த வருவாயில், 5 சதவீதத்தை இழக்க நேரிடும்.தெற்காசியாவில் மட்டும், 39.1 கோடி மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளனர். அவர்கள் மூலம் எதிர்காலத்தில் கிடைக்க வேண்டிய வருவாயில், 45.54 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இது அதிகபட்சமாக, 64.55 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம்.


இதில் பெரும் பாதிப்பு, இந்தியாவில் தான் ஏற்படும். இந்தியாவுக்கு, 29.36 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அனைத்து நாடுகளுக்கும், தங்கள், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். அத்துடன், இந்தியாவில், 55 லட்சம் மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயமும் உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post