Title of the document
பொதுமுடக்கத்தால் டீ  விற்பனை செய்யும் தனியார் பள்ளி பெண் முதல்வர்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge2eP6wBvmyEZz9t4UE484hdy2DZlo8ltZ9tpcXm80OnBdKQwahaNqy-kd0nVVTsUm7XiKUJu339080vqiAW-TIcEZIsFnoX2jloOJTMqMAMkIj5nrSz-Oxqhmpf7DOURRhum1DEO6biRW/s320/WhatsApp_Image_2020-09-30_at_10.jpeg
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, பொதுமுடக்கத்தால் பள்ளி மூடப்பட்டு கிடப்பதால் வேலை இழந்த தனியார் பள்ளி பெண் முதல்வர் பெட்டிக்கடை வைத்து  தேநீர் விற்பனை செய்து வருகிறார்.


சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா(35). இவரது மனைவி செல்வி(32). முதுநிலை இயற்பியல் மற்றும் பி.எட்., ஆசிரியர் பட்டம் பெற்றுள்ளார். 5 ஆண்டுகள் பல்வேறு தனியார் பள்ளிகளிலும், திருமணத்திற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாகத் தனது கணவரின் தனியார் பள்ளியில் முதல்வராகவும் பணியாற்றி வருகிறார்.


கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் மூடப்பட்டு கிடப்பதால் வேலை இழந்த இவர், பள்ளிக்கு எதிரே வண்ணாத்திகுட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஆவின் பாலகம் பெட்டிக்கடை வைத்து, தேநீர் விற்பனை செய்து வருகிறார். பள்ளி மாணவ-மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் இவரிடம் வியாபாரம் செய்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இதுகுறித்து தனியார் பள்ளி முதல்வர்  செல்வி கூறியதாவது:


"முதுநிலை இயற்பியல் மற்றும் பி.எட்., பட்டம் பெற்றுள்ள நான், பல்வேறு தனியார் பள்ளிகளில் பணியாற்றித் திருமணத்திற்கு பிறகு எனது கணவர் சோமம்பட்டி சிவா வண்ணாத்திக்குட்டை கிராமத்தில் நடத்திவரும் அக்ஷய வித்யாலயா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறேன்.


பொது முடக்கத்தால் பள்ளி மூடிக் கிடப்பதால் போதிய வருவாய் இல்லை. பெரும்பாலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவ- மாணவியர்களின் பெற்றோர்களால் பள்ளிக்குக் கட்டணத்தையும் செலுத்த முடியவில்லை. அவர்களையும் நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால் குடும்ப வருவாய்க்காகவும், தனது மாமனார்  வண்ணாத்திக்குட்டை பேருந்து நிறுத்தம் அருகே நடத்தி வரும் பெட்டிக்கடையில் தினம்தோறும் தேநீர் விற்பனை செய்து வருகிறேன்.


இதற்கு மாணவ - மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.  என்னைப் போன்று ஏராளமான தனியார் பள்ளி ஆசிரிய - ஆசிரியைகள், வருவாய் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.


இவர்களுக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவு படித்திருந்தாலும் சுயதொழில் செய்து, அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தனது தேவைகளை நிறைவுசெய்து கொள்ளும்போது மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றார் செல்வி.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post