Title of the document
 பாட புத்தகங்களை தபால் மூலமாக மாணவர்களுக்கு அனுப்ப கல்வித்துறை முடிவு 


பள்ளி மாணவர்களுக்கு, தபால் மற்றும் கூரியர் சேவை வாயிலாக, பாட புத்தகங்களை அனுப்புவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

கொரோனா தொற்று பிரச்னையால், ஜூனில் திறக்க வேண்டிய பள்ளி, கல்லுாரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியில் வகுப்புகளை நடத்துகின்றன.இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் உள்ளதால், அவர்களுக்கு உரிய நேரத்தில் பாடங்களை நடத்த வேண்டியது அவசியம்.

ஆன்லைன் வழி மற்றும் வீடியோ பாடங்களை படித்தாலும், மாணவர்களுக்கு புத்தகங்கள் தேவை.தமிழ்நாடு பாடநுால் கழகம் வாயிலாக, பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு உள்ளன. இந்த புத்தகங்களை, உரிய நேரத்தில் மாணவர்களிடம் சேர்க்க வேண்டும். சிறிய கிராமங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே ஆசிரியர்கள் சென்று, புத்தகங்களை வினியோகம் செய்யலாம்.நகரப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, தபால் மற்றும் கூரியர் சேவை வாயிலாக, புத்தகங்களை அனுப்பலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது.

பாட புத்தகங்களை கூரியர் வழியே அனுப்பும் திட்டம் ஏற்கனவே, தமிழ்நாடு பாட நுால் கழகத்தில் அமலில் உள்ளது.அந்த திட்டத்தை விரிவுபடுத்தி, அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்த, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post