Title of the document
அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும், கட்டணமின்றி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் வீடு தேடி சென்று பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய ேசவையின் கீழ் வங்கிகள் திறந்திருந்தாலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்துக்கு தடை செய்துள்ளதால்  வாடிக்கையாளர்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று பணம் வழங்க மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி களம் இறங்கி உள்ளது.

இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளரும் ஏஇபிஎஸ் வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே 10 ஆயிரம் வரை பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏஇபிஎஸ் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் ஆதார் எண் இணைக்கப்பட்ட எந்த ஒரு வங்கி கணக்கில் இருந்தும், அருகில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரிடம் தங்கள் வீட்டில் இருந்தபடியே பணம் பெறலாம். இந்த சேவைக்கு எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், கல்வி உதவித்தொகை, கேஸ் மானியம் மற்றும் அரசின் அனைத்து விதமான மானியங்களை உங்கள் ஊரில் உள்ள அஞ்சலகங்களிலேயே பெற முடியும். வீட்டு வாசல் வங்கி சேவையை பயன்படுத்தி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் இந்த ஊரடங்கு காலத்தில் சமூக விலகலை கடைபிடிக்கலாம். பணம் எடுக்க தொலைவில் உள்ள வங்கி கிளையோ அல்லது ஏடிஎம் இயந்திரத்தையோ தேடும் அலைச்சலின்றி ஏஇபிஎஸ் பயன்படுத்தி தங்கள் ஊரில் உள்ள அஞ்சலகத்திலேயே தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் பெறுதல், இருப்பு விசாரணை மற்றும் சிற்றறிக்கை போன்ற வங்கி சேவைகளை பொதுமக்கள் பெறலாம். இதன் மூலம் வங்கி இல்லாத மற்றும் வங்கி சேவை எளிதில் கிடைக்காத கிராமங்களிலும், டிஜிட்டல் முறையில் பணம் பரிவர்த்தனைகள் ஏழை, எளிய மக்களை சென்றடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post