அக்னி நட்சத்திரம்‘ என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் வருகிற 4-ந்தேதி
(திங்கட்கிழமை) தொடங்கி வரும் 28-ந்தேதி வரை 24 நாட்கள் இருக்கும்.
அக்னி நட்சத்திரம்
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில்
வெப்பம் அதிகரித்து வருகிறது.
சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில்
வெப்பம் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) அக்னி நட்சத்திரம் என்ற
கத்திரி வெயில் தொடங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள் அதாவது வருகிற
28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில்
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது வழக்கம்.
வானிலை ஆய்வு மையம்
கத்திரி வெயில் காலத்தில் வெப்பம் அதிகரிப்பது தொடர்பாக சென்னை வானிலை
ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வானிலை ஆய்வு மைய தரவுகளில் அக்னி
நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் என்ற வார்த்தையே இல்லை’ என்கின்றனர்.
முன்னோர்களின் வானியல் கணக்கின்படியும், அக்னி நட்சத்திர காலம் என்பது
ஏற்கனவே கணக்கிடப்பட்ட ஒன்றாகும்.
வெப்பத்தின் தாக்கம்
நடப்பாண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு பிறப்பித்து
உள்ளது. இதனால் மாநகரப்பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துகள்
முற்றிலும் முடங்கி உள்ளது.
இதனால் வெப்பத்தின் தாக்கம் பெரிதாக பொதுமக்களுக்கு தெரியவில்லை. ஆனால்
வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் வீடுகளில் மின்விசிறிகள், ஏ.சி.,
பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்து உள்ளது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை
மழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் பகல் பொழுதில் சற்று
குறைந்து காணப்படுகிறது.
Post a Comment