Title of the document
2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள், காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

சமீப காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட எந்த ஒரு பட்ஜெட்டைவிடவும், இந்த பட்ஜெட் மிகவும் சவாலானது, தனித்துவமானது.

சமீப காலங்களில் இந்திய பொருளாதாரம் என்பது வீரேந்திர சேவாக் போல அடித்து ஆடக்கூடிய ஓபனிங் ஆட்டக்காரர் நிலைமையில் இருந்தது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்ததால் அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து பார்க்கக்கூடிய சுதந்திரம் நிதி அமைச்சர்களுக்கு வாய்த்தது.

பாதுகாப்பு
மிடில் ஆர்டர்
ஆனால் தற்போது நிர்மலா சீதாராமன் மிடில் ஆர்டரில் இறங்கக் கூடிய ராகுல் டிராவிட் அல்லது லட்சுமணன் போன்றோரின் சூழ்நிலையில் உள்ளார்.

வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே செல்வது, மந்தநிலை போன்றவற்றின் காரணமாக புது முயற்சிகள் எதையும் எடுக்க முடியாது. அடித்து ஆட முடியாமல், தடுத்து ஆடும் நிலை. மிகவும் கவனத்துடன் ஒவ்வொரு அடியையும் முன்னெடுத்து வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் அவர் உள்ளார்.

நிதி சிக்கல்
சலுகையும் வேண்டும்

ஒரு பக்கம் தனிநபர் வருமான வரியில் சலுகை கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வரிச்சலுகை அம்சங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். காரணம்.. மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லை. எனவே பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்பது அவர் அறிந்துள்ளார். அதே நேரம் வரிச் சலுகைகளை அறிவித்தால், ஏற்கனவே உள்ள நிதிப்பற்றாக்குறை இன்னமும் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது என்பதையும் அவர் அறியாமல் இல்லை. உரலுக்கு ஒரு பக்கம் என்றால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போன்ற ஒரு சூழ்நிலை.
வரி சலுகை
பட்ஜெட்

இருப்பினும், பொருளாதார வல்லுனர்கள் கருத்துப்படி கண்டிப்பாக இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகை இருக்கும் என்கிறார்கள். வரும் 8ம் தேதி டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தலைநகரை கைப்பற்ற வேண்டும் என்ற ஆவலில் பாஜக உள்ளது. சமீபகாலமாக பல மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வியை சந்தித்த பாஜகவுக்கு இந்த வெற்றிதான் பூஸ்ட். எனவே நடுத்தர மக்கள் பெரிதும் வாழக்கூடிய டெல்லி வாக்காளர்களை கவரும் வகையில் ஒட்டுமொத்தமாக தனிநபர் வருமான வரியில் அருமையான சலுகைகள் வழங்கப்படும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
வருமான வரி
வரி விகிதம்

தற்போதுள்ள தனிநபர் வருமான வரி விகிதங்கள் இதுதான்: 1 ரூபாய் - 2.5 லட்சம் ரூபாய் வரி இல்லை. 2.5 லட்சம் - 5 லட்சம் ரூபாய், 5% வரி. 5 லட்சம் - 10 லட்சம் ரூபாய் என்றால் 20% வரி. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் - 30% வரி வசூலிக்கப்படுகிறது. இதை மாற்றி 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கலாம் என்பது பலரும் பரிந்துரைக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. எனவே கண்டிப்பாக இந்த பட்ஜெட்டில் இதுபோன்ற ஒரு அறிவிப்பு வெளியாகி விடும் என்ற நம்பிக்கை நடுத்தர மக்களிடம் உள்ளது. இதற்கு டெல்லி தேர்தலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார்கள் அவர்கள். நாளை மறுநாள் பொழுது எப்படி விடிகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post