Title of the document



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதால், தங்கள் பிள்ளைகளை சேர்க்க, அரசு பள்ளிகளை நோக்கி, பெற்றோர் படையெடுக்க துவங்கி உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 109 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 74 தனியார் பள்ளிகளும் உள்ளன. கடந்த காலங்களில், தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டினர்.

தனியார் பள்ளியில் படித்தால், ஆங்கில அறிவு மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என, பெற்றோர் நம்பினர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மாவட்டத்தில் அரசு பள்ளிகளிலும் ஆங்கிலவழியில் பயிற்றுவிக்கப் படுகிறது. இதற்காக, அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தனியார் பள்ளிக்கு நிகராக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் வெளியான, பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், ஏழு அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 40 பள்ளிகள், 90 சதவீதமும், மற்றவை, 60 சதவீத்துக்கு மேலும் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நிகராக, அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இதைடுத்து, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் தங்கள் குழந்தைகளை தங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்க, பெற்றோர் முடிவு செய்து, முன்கூட்டியே ஆசிரியர்களிடம் சொல்லி வைத்துள்ளனர். இதனால், இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பில், அரசு பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post