தேர்வுக்கு வராத மாணவர் பெயர்: மடிக்கணினி பட்டியலிலிருந்து நீக்கம் அனைத்து தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களை, மடிக்கணினி தகுதி பட்டியலிருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில், 276 பள்ளிகளில் படிக்கும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, மடிக்கணினிகள் வழங்க, பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டது.
தேர்தல் அறிவிப்புக்கு முன், பல்வேறு பள்ளிகளில், அவசர அவசரமாக வழங்கப்பட்டாலும், இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. தொடர்ந்து, அனைத்து வேலைநாட்களில், பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. தற்போது, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில், அனைத்து தேர்வுகளிலும் பங்கேற்காத, மாணவ, மாணவியரின் பெயர்களை, மடிக்கணினி தகுதி பட்டியலிலிருந்து நீக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம், மடிக்கணினி பெறாத, தகுதியுள்ள மாணவர்களுக்கு, தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் வழங்கப்படும்.
Post a Comment