Title of the document


அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மற்றும் அவற்றில் ஆசிரியர்களை நியமித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதி மன்றம் வழங்கிய தடை காரணமாக மறு உத்தரவு  வரும் வரை,  ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு நடுநிலைப் பள்ளிகளில் வளாகங்களில் இயங்கிவரும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க அரசு  உத்தரவிட்டது. இதன்பேரில் 2381 அங்கன்வாடி மையங்களில் மேற்கண்ட வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை அந்த வகுப்புகளை நடத்த  வேண்டாம் என்று தொடக்க கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு நடுநிலைப் பள்ளிகள் வளாகங்களில் இயங்கி வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொங்கப்பட்டு, அந்த வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் செய்ய தொடக்க  கல்வித்துறையின் மூலம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்மீது சில ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் நீதி மன்றம்  இடைக்கால தடை வழங்கியுள்ளது. அதனால் மறு உத்தரவு வரும் வரை, மேற்கண்ட தொடக்க கல்வித்துறையின் கடிதத்தின் மீது ஆசிரியர் நியமனம் செய்வதையும், பணி நிரவல் செய்வதையும் நிறுத்தி வைக்க வேண்டும்.  இவ்வாறு அந்த அறிவிப்பில் தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post