Title of the document
பொது, ஆசிரியர் சேமநலநிதி சந்தாதாரர்களுக்கு செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பெற சந்தாதாரர்கள் செல்லிடப்பேசி எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.

இதுகுறித்து முதுநிலை துணை மாநில கணக்காயர் (நிதி) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொது சேமநல நிதி (ஜிபிஎப்), ஆசிரியர் சேமநலநிதி (டிபிஎப்) ஆகிய சந்தாதாரர்களுக்கு செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் அளிக்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் கணக்கிலுள்ள இருப்புத் தொகைக்கான மாதாந்திர குறுஞ்செய்தி, சந்தா மற்றும் கடன் தொகைக்கான மாதாந்திர குறுஞ்செய்தி, கணக்கின் விடுபட்ட தொகை குறித்து மூன்று மாதத்துக்கு ஒருமுறை குறுஞ்செய்தி, விடுபட்ட தொகை பற்றிய விவரங்கள் சமர்ப்பிப்பதற்கான நினைவூட்டல் குறுஞ்செய்தி, கணக்கின் இறுதித் தொகை பெறுவதற்காக அனுப்பிய விண்ணப்பத்தின் தற்போதைய நிலை மற்றும் சந்தாதாரர் பிரதியை பதிவிறக்கம் செய்வதற்கான குறுஞ்செய்தி ஆகியவற்றைஅனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

சந்தாதாரர்கள் இந்தச் சேவையை பயன்படுத்திக்கொள்ள தங்களுடைய செல்லிடப்பேசி எண்ணை www.agae.tn.nic.in  என்ற மாநில கணக்காயர் அலுவலக வலைதளத்தில் பதிவு செய்யவேண்டும்.
சந்தாதாரர் அறிவிப்புப் பிரதி அனுப்பப்படமாட்டாது:

ஓய்வுபெற்ற சந்தாதாரர்கள் தங்களுடைய கணக்கின் இறுதித்தொகை பெறுவதற்கான ஆணை அனுப்பப்பட்டது குறித்த சந்தாதாரர் அறிவிப்புப் பிரதி வருகிற 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
மாறாக, மாநில கணக்காயர் அலுவலக வலைதளத்திலிருந்து சந்தாதாரர் அறிவிப்புப் பிரதியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதாவது www.agae.tn.nic.in என்ற வலைதளத்தில்  'know your GPF status'  என்ற மெனுவிலிருந்து இதைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post