Title of the document

அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் திருடப் பட்டதாக, புகார் எழுந்துள்ளதால், பாதுகாப்பை பலப்படுத்த, பள்ளிகளுக்கு, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், இன்று முதல் அரையாண்டு தேர்வுகள் துவங்குகின்றன. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்த வினாத்தாள்கள் அனைத்தும், ஒரு வாரத்திற்கு முன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ,, அலுவலகங்களுக்கு, சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது. சி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்து, கல்வி மாவட்ட வாரியாக, பாதுகாப்பு மையங்கள் உள்ள பள்ளிகளுக்கு, வினாத்தாள்கள் அனுப்பப்பட்டன.அங்கு, வினாத்தாள் கட்டுகள், 'சீல்' வைக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 



இன்று தேர்வு துவங்க, இரண்டு மணி நேரத்துக்கு முன், வினாத்தாள் கட்டு வைக்கப்பட்டுள்ள மையங்களில் இருந்து, சுற்றுப்புற பகுதி பள்ளிகளுக்கு, வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படும்.இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள, ஒரு அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில், வினாத்தாள் வைக்கப்பட்ட மையத்தின் பூட்டை உடைத்து, வினாத்தாள் திருடப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வினாத்தாள் காணாமல் போன பள்ளியில், ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன், இரண்டாம் பருவ இடை தேர்வு வினாத்தாளும் காணாமல் போயுள்ளது. இது குறித்து, விசாரணை நடந்து வரும் நிலையில், மீண்டும் இன்னொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.இதையடுத்து, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக, பள்ளிகளுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரையாண்டு தேர்வை, முழுமையாக ரகசிய தன்மை காத்து, நடத்தி முடிக்க வேண்டும். வினாத்தாள் கட்டுகளுக்கு, உரிய பாதுகாப்பு வசதி செய்ய வேண்டும்.வினாத்தாள்களை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுத்து, பயிற்சி எடுக்க வைப்பது; நகல் எடுத்து மாணவர்களுக்கு கொடுப்பதாக புகார்கள் எழுந்தால், பள்ளிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுஉள்ளது.

தமிழகம் முழுவதும், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவ தேர்வுகளும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொது தேர்வும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும், அரையாண்டு தேர்வு, இரண்டாம் பருவ தேர்வுகள் இன்று துவங்க உள்ளன.இதில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வும்; ஒன்பதாம் வகுப்புக்கு இரண்டாம் பருவ தேர்வும் நடக்கின்றன. மற்ற வகுப்புகளுக்கு, தனியார் பள்ளிகளில், இன்று முதல் விருப்ப பாடங்களுக்கும்; வரும், 13ம் தேதி முதல் முக்கிய பாடங்களுக்கும், தேர்வு நடத்தப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையும், வரும், 12 முதல், இரண்டாம் பருவ தேர்வு துவங்க உள்ளது. அனைத்து பள்ளிகளிலும், வரும், 22ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. இதையடுத்து, அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை விடப்பட்டு, ஜன., 2ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post