Title of the document

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

உரை:
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்..




பழமொழி :

Diamond cuts diamond

முள்ளை முள்ளால் எடு

பொன்மொழி:

வாழ்வின் ரகசியம் என்பது -
நீ என்ன நினைக்கிறாயோ,
அதை செய்யாமல்
இருப்பது அல்ல.
எதை செய்யப் போகிறாயோ,
அதை விரும்புவதுதான்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.வெள்ளை யானைகளின் நிலம்?
தாய்லாந்து

2.கடலின் ஆபரணங்கள்?
மேற்கிந்திய தீவு

நீதிக்கதை

நரியும் சின்ன முயலும்! - சிறுவர் கதை
(Fox and Rabbit Story for Kids)






முன்னொரு காலத்தில் சாம்பல் நிற முயலும்,​​ தந்திரமான குள்ள நரியும் இருந்தன.

பருவநிலை மாறியது.​ விரைவிலேயே வந்துவிட்டது குளிர் காலம்.​ பனிப்புயல் வீசியது.​ வானத்திலிருந்து சிறுசிறு பனித்துகள்கள் மழைபோல் கொட்டத்தொடங்கின.​ குளிரின் கடுமையால் முயலின் சாம்பல் நிறம் முற்றிலும் வெளுத்து,​​ பனி வெண்மையானது.

‘இந்தக் குளிரைத் தாங்க முடியவில்லை.​ நான் அவசியம் ஒரு குடிசை கட்டிக்கொள்ளத்தான் வேண்டும்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது முயல்.

அது கொஞ்சம் மரப்பட்டைகளைச் சேகரித்து வந்து வேலையைத் தொடங்கியது.​ வீடு கட்டும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முயலைப் பார்த்து குள்ளநரி கேட்டது:’ அடேய், முயல் பயலே,​​ நீ என்னதான் செய்துகொண்டிருக்கிறாய்?”

‘நீ பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய் குள்ளநரி அக்கா?​ நான் கதகதப்பாக வசிக்க ஒரு குடிசை கட்டிக்கொண்டிருக்கிறேன்.”

‘ஆமாம், ​​ ஆமாம்.​ ரொம்ப நல்ல யோசனைதான்” என்ற குள்ளநரி,​​ பிறகு தனக்குள் ரகசியமாகச் சொல்லிக்கொண்டது:​ “நாமும் ஏன் ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளக்கூடாது?​ ஆனால் நான் கட்டப்போகும் வீடு ஒரு பளிங்கு மாளிகையாக இருக்கும்.​ ஆமாம்,​​ நான் ஒரு அற்புதமான பளிங்கு அரண்மனைபோன்று என் வீட்டைக் கட்டுவேன்.​ முட்டாள்கள்தான் மரப்பட்டைகளால் வீட்டைக் கட்டுவார்கள்.​ ஹா…ஹா…ஹா…’

பிறகு அந்தக் குள்ள நரி,​​ பெரிய பெரிய பனிக்கட்டிகளைத் தூக்கிவரத் தொடங்கியது.​ ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்தப் பனிக்கட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது.

இரண்டு வீடுகளும் ஒரே நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டன.​ முயலும்,​​ நரியும் அதனதன் வீட்டிற்குள் குடிபுகுந்தன.​ குள்ளநரி தன் பனிக்கட்டி வீட்டின் சன்னலில் அமர்ந்தபடி முயலை உற்றுப் பார்த்து,​​ “இந்த முயல் பயலைப்போல ஒரு மட சாம்பிராணி எங்காவது இருப்பானா!’ என்று நினைத்து கேலிச் சிரிப்புச் சிரித்தது.​ “இவன் நாகரிகம் தெரியாத நாட்டுப்புறத்தான்!​ போயும் போயும் அந்த மரப் பட்டைகளை வைத்து வீடு கட்டியிருக்கிறானே,​​ என்ன ஒரு கோமாளித்தனம்!​ என்னுடைய வீடு தூய்மையாகவும்,​​ பளபளப்பாகவும் இருக்கிறது.​ இது உண்மையிலேயே ஒரு பளிங்கு அரண்மனைதான்.​ ராஜாக்களிடம்தான் இதுபோன்ற வீடு இருக்கும்.’

குளிர்காலம் இருக்கும்வரை நரிக்கு ஏதும் சிக்கலில்லை.​ இளவேனிற்காலம் வந்ததும்தான் தொடங்கியது பிரச்னை.​ அப்போது கதிரவன் வெப்பமாகப் பிரகாசிக்கத் தொடங்கினான்.​ குள்ளநரியின் அரண்மனை உருகித் தண்ணீராக ஓடியது.​ வீடு இல்லாமல் இனிமேல் என்ன செய்யும் அந்த நரி?​ ஒருநாள் முயல் புல் மேய்வதற்காக வெளியே சென்றது.​ அந்த நேரம் பார்த்து நரி,​​ முயலின் வீட்டிற்குள் நுழைந்தது.​ ​ ​

முயல் அங்கங்கே புல் மேய்ந்துகொண்டே மெதுவாக வீட்டிற்குத் திரும்பியது.​ அது தன் வீட்டுக் கதவைத் தள்ளியது.​ ஆனால் திறக்க முடியவில்லை.​ ​ அது மறுபடியும் கதவைத் தட்டத் தொடங்கியது.​ ​

‘ யார் அது?” குள்ளநரி கோபத்துடன் மிரட்டியது.

‘நரியக்கா,​​ நான்தான் சாம்பல் நிற முயல் வந்திருக்கிறேன்.​ கதவைத் திறங்கள்.”

‘சாம்பல் முயலாவது,​​ சோம்பல் முயலாவது…​ யாராக இருந்தாலும் வெளியிலேயே கிட!​ ” குள்ள நரி சிடுசிடுப்புடன் சொன்னது.

சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முயல் மறுபடியும் சொன்னது:​ ‘நரியக்கா,​​ உங்கள் கிண்டல் பேச்சைக் கொஞ்சம் நிறுத்துங்கள்.​ என்னை உள்ளே விடுங்கள்.​ நான் தூங்கவேண்டும்.”

ஆனால் தந்திரமான குள்ள நரி உறுமியது.​ ‘நான் உன்னை உதைத்து நொறுக்குவேன்,​​ அடித்து விளாசுவேன்.​ முயலே,​​ அதன் பிறகு உன்னைப் பழந்துணிபோல் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்துவிடுவேன்!”

முயல் அழுதுகொண்டே துயரத்துடன் அலைந்து திரிந்தது.​ வழியில் அது ஒரு ஓநாயைப் பார்த்தது.​ ‘முயலே, எதற்காக அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டது ஓநாய்.​ ​


முயல் அழுதுகொண்டே சொன்னது:​ ‘என் நிலை உனக்கு வந்தால் நீயும்கூட இப்படித்தான் அழுவாய்.​ எனக்கு மரப்பட்டைகளால் ஆன ஒரு வீடு இருந்தது.​ குள்ள நரிக்கு பனிக்கட்டியால் ஆன வீடு இருந்தது.​ அந்த நரியின் வீடு சூரிய வெப்பத்தால் உருகிக் கரைந்து காணாமல்போய்விட்டது.​ உடனே,​​ நரி திருட்டுத்தனமாக என் வீட்டிற்குள் நுழைந்துகொண்டது.​ அது இப்போது என் சொந்த வீட்டிற்குள்ளேயே என்னை உள்ளே விடமாட்டேன் என்று மிரட்டுகிறது.”

‘நீ கொஞ்சம் பொறுமையாக இரு.” ஓநாய் சொன்னது.​ ‘நாம் இருவருமாகச் சேர்ந்து அதை வெளியே துரத்திவிடுவோம்.” ​

‘ அய்யோ உன்னால் முடியாது ஓநாய் அண்ணா,​​ முடியவே முடியாது.​ அந்த நரி உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டுள்ளது.”

‘அட! ​ நான் என்ன செய்கிறேன் என்று நீ பார்க்கத்தானே போகிறாய்.​ அதை நான் துரத்தியடிக்காவிட்டால் என் பெயர் ஓநாய் அல்ல!​ என் பெயரை சுண்டெலி என்று மாற்றி வைத்துக்கொள்கிறேன்.”

முயல் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.​ நரியை விரட்டியடிப்பதற்காக அவை இரண்டும் புறப்பட்டன.​ சற்று நேரத்தில் வீட்டையடைந்தன.​ ​

‘ஏய்… ​ திமிர்பிடித்த நரியே,​​ மரியாதையாக வெளியே வந்துவிடு!” ஓநாய் சத்தமாகச் சொன்னது.​ ​ஆனால் தந்திரமான நரி பதிலுக்கு மிரட்டியது:​ ‘ஓநாயே,​​ நான் வெளியே வந்தேனென்றால் உன்னை அடித்துத் துவைத்துவிடுவேன்,​​ பின்னியெடுத்துவிடுவேன்,​​ அப்புறம் உன்னைக் கந்தல் கந்தலாகக் கிழித்து எறிந்துவிடுவேன்!” ​

‘அய்யய்யோ!​ நரி மிகவும் கோபமாக இருக்கிறது போலிருக்கிறது” என்று மெதுவாகச் சொன்ன ஓநாய்,​​ வாலைப் பின்னங்கால்களுக்குள் ஒடுக்கிக்கொண்டது.​ பிறகு பயத்தில் அலறியபடியே ஒரே பாய்ச்சலாக ஓடிச் சென்றது.​ ​

பிறகு எருது ஒன்று முயலைப் பார்த்தபோது கேட்டது:​ ‘நீ ஏன் அழுதுகொண்டிருக்கிறாய் சின்ன முயலே?”

முயல், ​​ எருதிடம் எல்லா விவரத்தையும் சொன்னது.​ முயலின் கதையைக் கேட்ட பிறகு சொன்னது எருது:​ ‘கவலைப்படாதே முயலே.​ நாம் இருவருமாகச் சேர்ந்து அந்த நரியை அங்கிருந்து விரட்டியடித்துவிடுவோம்.” முயல், ‘உன்னால் முடியாது” என்று தடுத்தும் கேளாமல் எருது நரி இருக்கும் வீட்டிற்கு வந்தது.

‘ஏய்… ​ நரியே, வெளியே வா!” எருது அதிகாரமாக அழைத்தது.​ ஆனால் நரியின் மிரட்டலில் அதுவும் பயந்து ஓடி ஒளிந்தது.​ பிறகு, முயலுக்கு உதவுவதாகச் சொன்ன கரடியும், நரியின் வசவைக் கேட்டு பாய்ந்தோடிச் சென்றது.​ என்ன செய்வதென்று தெரியாமல் முயல் ஒரு மண்மேட்டின் மீது அமர்ந்து அழத் தொடங்கியது.​ அப்போது, வாள் ஏந்தியபடி வந்தது ஒரு சிவப்புக் கொண்டைச் சேவல்.​ ​ அது முயலிடம் கேட்டது:

‘முயலே!​ நீ எதற்காக அழுதுகொண்டிருக்கிறாய்?”

தன் கதையை மறுபடியும் சொல்லி அழுதது முயல்.

சேவல் சொன்னது:​ ‘கொஞ்சம் பொறு.​ நாம் இருவருமாகச் சேர்ந்து அந்த நரியை உன் வீட்டிலிருந்து விரட்டியடித்துவிடுவோம்.”

‘ஓ… ​ சிவப்புக் கொண்டைச் சேவலே,​​ உன்னால் அது முடியாது.​ முதலில் ஓநாய் வந்தது.​ நரிக்குப் பயந்து​ அது ஓடிவிட்டது.​ பிறகு எருது வந்தது.​ அதுவும் அஞ்சி நடுங்கி பாய்ந்தோடிவிட்டது.​ கரடியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.​ இப்போது நீ எனக்கு உதவுகிறேன் என்கிறாய்.​ நீயும் தோற்றுத்தான் போவாய்.”

‘சந்தேகப்படாதே முயலே.​ நாம் முயற்சி செய்து பார்க்கலாம்” என்றது சேவல்.​ அவை இரண்டும் நரியை விரட்டியடிக்கப் புறப்பட்டன.​ முயலின் வீட்டை அடைந்ததும் சேவல் எழுச்சியான குரலில் பாடலொன்றைப் பாடியது:

‘செந்நிறக் கொண்டையன் தலையுயர்த்தி வருகிறான்!

பந்தாடப்போகிறான் பண்பற்ற நரியையே!வீட்டைத் திறந்து முயலையும் குடியேற்றப் போகிறான்!

நரித் தோலை உரித்து தோரணமும் கட்டுவான்!”

குள்ள நரி பயந்து நடுங்கியது.​ அது கெஞ்சும் குரலில் சொன்னது:​ ‘திரு செந்நிறக் கொண்டையன் அவர்களே,​​ ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள்.​ ஒரே ஒரு நிமிடம் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள் அய்யா!​ நான் என் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறேன்…”

ஆனால் சேவல் தொடர்ந்து வீரத்துடன் பாடியது:

‘சேவல் வருகிறான் வாள்கொண்டு!​ ​

இரு துண்டாய் ஆகுமே உன் தலையும்!”

குள்ள நரி நைசாக கதவைத் திறந்தது.​ பிறகு விருட்டென்று தாவி ஓட்டம் ஓட்டமாக ஓடிப்போனது.​ அதன் பிறகு சேவலும் முயலும்,​​ அந்த வீட்டில் என்றும் இணைபிரியாத நண்பர்களாக வசித்தன.




இன்றைய செய்தி துளிகள்:


1.பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு: டெண்டர் அறிவிக்க அரசாணை

2.சென்னையில் வெகுவாக குறைந்த சுற்றுச்சூழல் மாசு... மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்

3.கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு : 5-ல் 4 தொகுதியில் ம.ஜ.த. - காங்கிரஸ் வெற்றி

4.அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளதை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்

5.நியூசி.,-க்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி : டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post