Title of the document

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தொலைநிலைக் கல்வி நிறுவன ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை சென்னைப் பல்கலைக்கழகம் எடுத்துள்ளது. இதற்காக தற்காலிக உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை பல்கலைக்கழக நிர்வாகம் வரவேற்றுள்ளது.
இந்த நிலையில், தொலைநிலைக் கல்வி நிறுவனத்துக்கு முழுநேர இயக்குநர் மற்றும் ஆலோசனைக் குழு நியமனம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே எழுந்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் உரிய எண்ணிக்கையில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், 3 படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துவிட்டு, மீதமுள்ள 50 -க்கும் அதிகமான படிப்புகளுக்கு யுஜிசி அனுமதியை ரத்து செய்தது.
யுஜிசி-யின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகத் துறைகளில் பணியாற்றி வரும் முழுநேரப் பேராசிரியர்களை, தற்காலிக அடிப்படையில் தொலைநிலைக் கல்வி நிறுவன துறைகளில் நியமிக்கும் நடவடிக்கையை பல்கலைக்கழகம் மேற்கொண்டது. பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, 30-க்கும் மேற்பட்ட தொலைநிலைப் படிப்புகளுக்கு யுஜிசி அனுமதி அளித்தது.
இதனிடையே, பல்கலைக்கழகத் துறைகளில் பணியாற்றும் முழு நேரப் பேராசிரியர்களை, தொலைநிலைக் கல்வி நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்கலைக்கழக ஆட்சிக் குழுவிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தொலைநிலைக் கல்வி நிறுவனத்துக்கு தற்காலிகப் பணி அடிப்படையில் 7 இணைப் பேராசிரியர்கள், 10 உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. வரும் 30 -ஆம் தேதிக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை வரவேற்றுள்ள பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தொலைநிலைக் கல்வி நிறுவனத்துக்கு முழு நேர இயக்குநரையும், இயக்குநருக்கான ஆலோசனைக் குழுவையும் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக தற்காலிக இயக்குநரே பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும், பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, இயக்குநருக்கு ஆலோசனை வழங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 3 பேர் கொண்ட துணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழு கடந்த 3 ஆண்டுகளாக அமைக்கப்படவில்லை. இதன் காரணமாகவே பல்வேறு பிரச்னைகளை கல்வி நிறுவனம் சந்தித்து வருகிறது என்றனர் அவர்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post