Title of the document

தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை.   இதனால் கல்வி திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் முக்கிய நகரமாகும். தொண்டியை மையமாக வைத்து 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளது. இங்கு வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் குழந்தைகளை தொண்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில் பெரும்பாலான பெண்கள் பள்ளி மேல்நிலை படிப்பை முடிப்பது இப்பள்ளியின் மூலம் மட்டுமே. கடந்த சில வருடங்களாக இப்பள்ளியின் கல்வி தரம் உயர்ந்துள்ளது என்பதை 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு தேர்வு சதவீதத்தின் அடிப்படையை பார்த்தாலே புரியும். கல்வி திறனில் மேன்மை அடைந்து வரும் வேளையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது மாணவிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. 
தொண்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் 450க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் 15 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இதிலும் கடந்த மாதம் பிளஸ்2 வகுப்புக்கு பாடம் எடுத்த அனைத்து ஆசிரியர்களும் பணிமாறுதலாகி சென்று விட்டனர். தற்போது  ஆசிரியர்கள் யாரும் இல்லாத நிலையில் மாணவிகள் பொது தேர்வை சந்திக்க உள்ளனர்.  தலைமை ஆசிரியர் உட்பட எந்த ஆசிரியரும் இல்லாமல் பள்ளி இயங்கி கொண்டிருக்கிறது. இதையும் அதிகாரிகள் அறிந்தும் அறியாதது போல் இருப்பது மாணவிகளை மட்டுமே பாதிக்கும்,
இதுகுறித்து முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில செயலாளர் சாதிக் பாட்சா கூறியது, மாலுமி இல்லாத கப்பல் போல், தலைமை ஆசிரியர் உட்பட எந்த ஆசிரியருமே இல்லாமல் தொண்டி பெண்கள் அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள் திண்டாடி வருகின்றனர். வழக்கமாக அரசு பள்ளிகளில் ஒரு சில பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பார்கள். 
ஆனால் இங்கு பிளஸ்2 வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், வேதியியல் உள்ளிட்ட 7 பாடத்திற்குமே ஆசிரியர்கள் இல்லை. பாவம் மாணவிகள் என்ன செய்வார்கள். அரசு பள்ளியின் தேர்வு சதவீதத்தை பார்க்கும் கலெக்டர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஏன் இப்பள்ளியில் எந்த ஆசிரியரும் இல்லை என்பதை அறிந்தும் கண்டுகொள்ளவில்லை. போர்கால அடிப்படையில் இப்பள்ளிக்கு ஆசிரியர்களை நியமித்து மாணவிகளை கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post