Title of the document
தமிழகத்தில் பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய சத்துணவு திட்டத்தில் தினமும் 10 லட்சம் முட்டை குறைக்கப்பட்ட விவகாரத்தில் மோசடி நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 58,474 அரசு பள்ளிகள், 54,472 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. பள்ளி மற்றும் அங்கன்வாடி சத்துணவு மையங்களின் மூலமாக தினமும் 60 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவிகள் சத்துணவு திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றனர். இவர்களுக்காக தினமும் 60 லட்சம் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. நடப்பாண்டில் பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் சத்துணவு திட்டத்திற்கான தினசரி முட்டை கொள்முதல் 60 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக குறைக்கப்பட்டு விட்டது. நடப்பாண்டில் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை தினமும் 60 லட்சம் முட்டை பெறப்பட்டது. 
ஜூலை மாதம் முதல் தினசரி முட்டை கொள்முதல் 50 லட்சமாக குறைந்தது.கடந்த ஜூலை 24ம் தேதி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் டெண்டர் அறிவிப்பில் முட்டை கொள்முதல் குறைந்த விவரங்கள் மாவட்ட வாரியாக குறிப்பிடப்பட்டது. 
கடந்த ஆண்டில், ஜூலை மாதத்திற்கான தினசரி முட்டை கொள்முதல் அளவுடன் ஒப்பிடுகையில் தினமும் 10 லட்சம் முட்டை கொள்முதல் குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 
முட்டை ெகாள்முதல் குறைந்த விவகாரத்தின் பின்னணியில் பெரும் முறைகேடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மாநில அளவில் அரசு பள்ளிகளில் 1.23 கோடி மாணவ மாணவிகள் கல்வி கற்கின்றனர். இதில் தினமும் 40.50 லட்சம் பேர் மட்டுமே சத்துணவு திட்டத்தில் பயனாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தது. நடப்பாண்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சத்துணவு திட்டத்தில் இடம் பெற்றிருந்தனர். 
அங்கன்வாடிகளில் 7,79,278 மாணவ மாணவிகள் பயனாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் மாணவ மாணவியர் சேர்க்கை 2 முதல் 3 சதவீதம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் நடப்பாண்டிற்கு தினமும் சுமார் 63 லட்சம் முட்டை கொள்முதல் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அதிகரிப்பிற்கு மாறாக, மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்திருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 
பள்ளி மற்றும் அங்கன்வாடி சத்துணவு திட்டத்தில் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையில் ‘பொய் கணக்கு’ காட்டியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சத்துணவு திட்டத்தில் இல்லாதவர்களின் பெயரில் முட்டை கொள்முதல் செய்து மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது. முட்டை கொள்முதல், சப்ளை போன்றவை ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட துறையில் டெண்டர் விடப்பட்டு, மேற்கொள்ளப்படுகிறது. 
பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை தினசரி, வாராந்திர தேவைப்பட்டியல் பள்ளிக்கல்வி நிர்வாகத்திடம் இருந்து பெறப்படுகிறது. தேவைப்பட்டியலில் குளறுபடி, மோசடி செய்து முட்டை கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 
முட்டை விவகாரத்தில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையில் நடந்த மோசடி, முறைகேடு மறைக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது உண்மையாக இருந்தால், அதை மறைத்து அதிகமாக காட்டியிருப்பது எதற்காக என்ற சந்தேகமும் நிலவுகிறது. மாணவ மாணவிகளின் சேர்க்கை அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் வெகுவாக குறைகிறது. 
ஆனால் ‘பள்ளி ரெக்கார்டுகளில்’ மறைக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மட்டுமே பொது தேர்வு காரணமாக மறைக்காமல் காட்டப்படுவதாக தெரிகிறது. 1 முதல் 9ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறித்து விசாரிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது கல்வியாளர்கள் வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
3 லட்சம் கூமுட்டை..?! 
முட்டை மோசடி விவகாரத்திற்கு பின், கொள்முதலில் பல்வேறு மாற்றம் 
செய்யப்பட்டுள்ளது. 385 ஒன்றியம், 200 மையங்கள் மூலமாக தினமும் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டையின் எடை 49 கிராம் அளவில் இருக்கவேண்டும். எடை குறைவாக (புல்லட் முட்டை) இருந்தாலும், தரமற்ற முட்டை வினியோகம் செய்தாலும் ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடைந்த, கெட்டுப்போன முட்டை கணக்கில் எடுக்கப்பட மாட்டாது. 
கோழிப்பண்ணையில், கோழி போடும் முதல் முட்டை எடை குறைவாக இருக்கும். இந்த முட்டை 25 கிராம் முதல் 30 கிராம் எடை அளவிற்குள் இருக்கும். இந்த முட்டைகளை சத்துணவு மையங்களுக்கு வினியோகம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சத்துணவு கூடங்களுக்கு 2 நாட்களுக்கு முன்பே முட்டைகளை வினியோகம் செய்து விடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்த முட்டைகளில் 3 லட்சம் முட்டை கெட்டுப்போனதாகவும், எடை குறைவாக இருப்பதாகவும் தெரிகிறது. ‘கூமுட்டையாக’ இருந்தாலும் இவற்றையும் பள்ளிக்கு சப்ளை செய்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.
சத்துணவில் அரை முட்டை 
சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள், குறியீடு உடன் சில கடைகளில் வெளிப்படையாகவே விற்கப்படுவதாக கூறப்படுகிறது. சில ஓட்டல்களில் சத்துணவு முட்டைகள் கிடைப்பதாக தெரிகிறது. 
மாவட்டம், ஒன்றியம் வாரியாக ஒதுக்கப்படும் முட்டை பதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சில மையங்களில் தினமும் முழு முட்டை வழங்காமல் அரை முட்டை வழங்குவதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முட்டையில் மட்டுமின்றி பள்ளி, அங்கன்வாடி மையங்களில் பருப்பு, எண்ணெய், அரிசி போன்றவையும் முறைகேடாக பதுக்கிவைத்து, கொண்டுசெல்வதாக கூறப்படுகிறது. 
மற்ற திட்டங்களிலும் மோசடி..?
பள்ளி கல்வித்துறையில் நோட்டு புத்தகம், இலவச லேப்டாப், சைக்கிள், நான்கு செட் சீருடை, காலணி, புத்தக பை, கிரையான்ஸ், கலர் பென்சில், கணித உபகரண பெட்டி, கம்பளி சட்டை, ரெயின்கோட், புவியியல் வரைபடம் போன்ற பல்வேறு திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. 
இதில் பயன்பெறும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, பெறப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை போன்றவற்றில் பெரும் வித்தியாசம் இருப்பதாக தெரிகிறது. கொள்முதல் செய்த பொருட்களை தணிக்கை செய்யவோ, விசாரிக்கவோ யாருமில்லாத நிலை உள்ளது. இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக செலவிடப்படுகிறது. இந்த செலவினங்களை ஆய்வு செய்ய, முறைகேடுகளை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post