Title of the document


நாட்டிலேயே முதல்முறையாக பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் மெய்நிகர்க் காட்சியாக்கம் (விர்ச்சுவல் ரியாலிட்டி), மெய்நிகர்க் காட்சி மிகுதியாக்கம் ஆகிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன என்று துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்தார்.
உயர்கல்வியில் நவீன தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்கும் வகையில் தொழில்நுட்பத்தை உள்ளடக்கி மெய்நிகர்க் காட்சியாக்கம், மெய்நிகர்க் காட்சி மிகுதியாக்கம் ஆகிய பாடப் பிரிவுகளில் சான்றிதழ், பட்டயம், பட்டப்படிப்புகளை வழங்குவதற்காக, சென்னை ஸ்கோப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி பெரியார் பல்கலைக்கழகத்தின்ஆட்சிக் குழுக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், துணைவேந்தர் பொ.குழந்தைவேல் முன்னிலையில், பதிவாளர் (பொறுப்பு) கே.தங்கவேல், சென்னை ஸ்கோபிக் நிறுவனம் சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அபுல் ஹசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். 
இதையடுத்து, பொ.குழந்தைவேல் நிருபர்களிடம் கூறியது:-
ஒளியியல் துறையில் லேசர் கண்டுபிடிப்புக்கு பின்னர் 3 டி வரிசையில் ஹோலாகிராம் பிம்பங்களை, 3 டி வழியாகப் பார்த்திட தொழில்நுட்பம் வழிவகை செய்தது. ஆனால், கடும் முயற்சியில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. தற்போது வளர்ந்துள்ள மெய்நிகர் தொழில்நுட்பம் கல்வி, ஆராய்ச்சியில் வியக்கத்தகு மாற்றங்களை உருவாக்க உள்ளது.
அறிவியல் ஆய்வுக் கூடங்களில் நிகழ்த்தப்பெறும் ஆய்வுகள் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலமாக நிகழ்த்தும்போது, ஆராய்ச்சியில் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும். அதேபோல், மாணவர்களின் கற்கும் திறனிலும் இது அரிய மாற்றங்களை உருவாக்கும்.
நவீன தொழில்நுட்பங்களை ஆன்லைன் வாயிலாக அளித்துவரும் சென்னை ஸ்கோபிக் நிறுவனமானது பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பாடங்களைப் பயிற்றுவிக்க உள்ளது. மெய்நிகர் காட்சியாக்கத் துறையில் இந்திய அளவில் முதல்முறையாக, சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை புதிய பாடத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்றார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post