3 வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு இந்தியாவின் 3-ஆவது பெரிய வங்கியாக உருவாகியுள்ளதாக நிதித்துறை சேவைகளின் செயலர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
இந்திய பொருளாதார நிலை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நிதித்துறை சேவைகளின் செயலர் ஆகியோர் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தனர். அப்போது மாநிலங்களைச் சார்ந்த 3 வங்கிகளை இணைக்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியதை தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக நிதித்துறை சேவைகளின் செயலர் ராஜீவ் குமார் கூறுகையில்,
மாநிலங்களைச் சார்ந்த தேனா பேங்க், விஜயா பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய 3 வங்கிகளையும் இணைக்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் 3-ஆவது மிகப்பெரிய வங்கிச்சேவை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் வங்கிச் சேவைகளில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. அதை மத்திய அரசு சரியாக முன்னெடுத்து வருகிறது.
மேலும் வெளிநாட்டு வங்கிச் சேவைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதுவும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றார்.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், இவ்வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கும், வங்கிச் சேவைகளிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், அதன் முந்தைய சேவைகள் அதேபோன்று தொடரும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment