Title of the document

TNTET தொடர்பாக அரசுகளின் நீடித்த குழப்பங்களால் குவியும் வழக்குகள் - தாமதமாகும் நியமனங்கள்! கேள்விக்குறியாகும் மாணவர் எதிர்காலம்! 


 
RTE-2009 சட்டம் இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் ஒன்றிய & மாநில அரசுகள் பயிற்சி முடித்தோரை நேரடியாக நியமிப்பதால் கற்பித்தலில் பின்னடைவு ஏற்படுவதாகக் கருதி அவர்களின் தகுதியைத் தேர்வு மூலம் சோதித்து அதன்பின் பணி நியமனம் செய்ய அறிவுறுத்தியது.

தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு மிகவும் கட்டுக்கோப்பான & நம்பகத்தன்மைமிக்க வகையில்தான் 2 ஆண்டுகள் மாநில அளவிலான தேர்வுகள் நடத்தப்பட்டு பட்டயச் சான்று வழங்கப்பட்டு வந்தது. இருந்தும் ஒன்றிய அரசின் சட்டத்தை ஏற்று தகுதித் தேர்வு நடத்த முன்வந்தது தமிழ்நாடு அரசு. இதில் மாற்றுக் கருத்துகளும் மறுப்புகளும் இருந்தாலும், இதை நடைமுறைப்படுத்தியதில் ஒரு Logic இருந்தது.

ஆனால், பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை RTE-2009ற்கு முன்பிருந்தே பதவி உயர்வின் வழியும், நேரடி நியமனங்கள் TRB தேர்வு மூலமும்தான் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் தகுதித் தேர்வு என்ற ஒன்றைத் தனியே நடத்த வேண்டிய தேவையே எழவில்லை. பட்டதாரி ஆசிரியர் நியமனம் போட்டித் தேர்வின் அடிப்படையில் தான் நடைபெற்று வருகிறது என்பதால் தகுதித் தேர்வு தேவையில்லை என்ற கொள்கை முடிவினை தமிழ்நாடு அரசு எடுத்திருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு ஏதும் நிகழவில்லை.

மேலும், TNTET தொடர்பாக திமுக - அஇஅதிமுக - திமுக ஆட்சிக் காலங்களில் தமிழ்நாடு அரசு எடுத்த அடுத்தடுத்த குழப்பமான முடிவுகளும் அரசாணைகளும் இன்றுவரை வழக்குகளைக் குவித்துக் கொண்டிருக்கின்றன.

இடைநிலை ஆசிரியர் நியமனம் என்பது அரசுத் தேர்வுகள் துறையின் ஆசிரியர் பயிற்சி பொதுத்தேர்வு - ஆசிரியர் தகுதித் தேர்வு - போட்டித் தேர்வு என்று நீண்டு கொண்டே செல்கிறது. இதனால், 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் நியமனமே செய்யப்படாது அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் சார்நிலைப் பணி விதிமுறைகளின்படி பதவி உயர்வில் நியமிக்கத் தகுதி வாய்ந்தோர் இல்லை என்றால் மட்டுமே நேரடி நியமனம் செய்ய வேண்டும் என்பதால், மேற்கண்ட பாதிப்பிலிருந்து பட்டதாரிப் பணியிடங்கள் தப்பித்ததோடு பதவி உயர்வின் வழியே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால், இன்று அதற்கும் வேட்டு வைக்கும் வகையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கும் TET வேண்டுமென்று கூறி வழக்குகளும் - மாறிமாறி தீர்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. இந்தக் கூத்து இத்தோடே நிற்காது Departmental Exam தேர்ச்சி கட்டாயத் தகுதியாக உள்ள 100% பதவி உயர்வுப் பணியிடங்களான நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் & உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கொடுமை என்னவென்றால், இவ்வழக்குகளில் அரசின் சார்பில் எவ்விதத் தெளிவான பதிலுரையும் வழங்கப்படுவதில்லை என்றும் / மௌனமே பதிலாக வழங்கப்படுவதாகவும் / தவறான தகவல்கள் தரப்பட்டு வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்த எந்தவொரு தெளிவான முடிவையும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசும் எடுத்ததாகத் தெரியவில்லை. இன்று (5.5.22) நடைபெற்ற வழக்கிலும் பதவி உயர்விற்கு TET அவசியமென ஏற்றுக்கொண்டுவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. இது தமிழ்நாடு அரசு சார்நிலைப் பணி விதிமுறைகளுக்கே எதிரான நிலைப்பாடு.

இது போன்ற குளறுபடிகள் தொடருமென்றால் அரசுத் தரப்பைத் தவிர்த்த இரு தரப்புகளும் அவரவர் தரப்பு நியாயத்தை நிலைநாட்ட மாற்றி மாற்றி மேல்முறையீடு செய்து கொண்டே இருக்க வேண்டியது தான். இதனால் பாதிக்கப்டப் போவது அரசுப் பள்ளி மாணவர்கள் தான்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நலனிற்காக இதுவரை ஒரு துரும்பைக்கூட கிள்ளிக் கொடுக்க மனமில்லாது RSS-ன் புதிய கல்விக் கொள்ளையை மாற்றுப் பெயர்களில் நடைமுறைப்படுத்தி வரும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு, குறைந்தபட்சம் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டாவது இவ்விடயத்தில் உறுதியான - தெளிவான - சரியான முடிவை உடனடியாக எடுக்க வேண்டும்.

30.01.2020-ல் வெளியான ப.க.து அரசாணை 12-ல் உள்ள அறைகுறை / தவறான நடைமுறைகளைத் திருத்தி புதிய அரசாணை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடும் அரசாணையில், TET குழப்பங்களை மட்டுமல்லாது பதவி உயர்வில் உள்ள one sitting, cross major, b.ed அவசியமா இல்லையா, முன்னேற்பு, பின்னேற்பு, Calendar & Academic year குழப்பங்கள், இணைப் பாடங்கள் என்பது குறித்தெல்லாம் வந்த அரசாணைகளையும் மறு ஆய்வு செய்து, குழப்பங்களின்றி தெள்ளத் தெளிவாக வெளியிட வேண்டும். மேற்படி அரசாணையில் பட்டதாரி பதவிக்கு B.ED., தேவையே இல்லை என்பதைப் போல Degree + 2yr Diploma என்று உள்ளது. இதை வைத்தும் நாளை வழக்கு தொடுக்கப்பட வாய்ப்புண்டு.


மேற்கண்ட அரசாணைகளைத் திருத்தம் செய்து தெளிவிக்கும் பணியில் IAS அதிகாரிகளையோ, MBA ஸ்காலர்களையோ முடிவெடுக்க அனுமதிக்காது, குறைந்தது 10 ஆண்டுகளாவது முறையாக அரசுத் தணிக்கையை முடித்துள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து அதில் முடிவாற்றப்பட வேண்டும். அம்முடிவு அரசின் கொள்கை முடிவாக வேண்டும்.


ஆசிரியர் இயக்கங்கள் அரசு தானாகவே செய்துதரும் என்றோ, ஸ்டாலின் அரசு செஞ்சா சரியாத்தான் இருக்குமென்றோ விடியல் கனவு கண்டு கொண்டிருக்காது, தமக்கான பொறுப்புகளை உணர்ந்து உடன் இதற்கான களத்தில் இறங்க வேண்டும்.

இல்லையெனில் ஆசிரியர் நியமனம் காலந்தாழ்த்தப்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் மென்மேலும் பாதிப்படையும்.


பின்குறிப்பு :

தற்போது பதவி உயர்வுக் கலந்தாய்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வழக்காடு மன்றம் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள்.


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post