Title of the document

December -  15-க்குள் 2000 சிறு மருத்துவமனைகள்: முதல்வர் பழனிசாமி


 தமிழகத்தில், 2,000 சிறு மருத்துவமனைகள் துவங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய தொடக்க உரையில்,


தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 சிறு மருத்துவமனைகள் துவங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு.


டிசம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தொடங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள், சிறப்பு அதிகாரிகள், கூடுதலாக களப் பணியாளர்கள் நியமித்தது, காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தியது, ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக்கவசங்கள் வழங்கியது, அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தனிமைப்படுத்தும் வசதி இல்லாதிருந்தால், அவர்களுக்கு அவ்வசதியை அரசு மையங்களில் ஏற்படுத்தி, 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியது, தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது போன்ற பணிகள் அம்மாவின் அரசால் மேற்கொள்ளப்பட்டன.


கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி, திருமழிசைக்கு மாற்றப்பட்டு, இந்நோய்ப் பரவல் படிப்படியாகக் குறைந்தவுடன் மீண்டும் கோயம்பேட்டிலேயே செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.


பிரதமர் காணொலிக் காட்சி மூலமாக தமிழகத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை கேட்டறிந்ததோடு, இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த முறையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது என்றும் பாராட்டினார். அதுமட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது என்ற செய்தியையும் தெரிவித்தார். அதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


பண்டிகை காலங்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முகக்கவசங்களை பொதுமக்கள் தவறாமல் அணிதல் மற்றும் அரசு அறிவித்த அறிவிப்புகளை பின்பற்றாதவர்கள் மீது அபராத விதிப்பு போன்ற நடவடிக்கைகளாலும் இந்நோய்த் தொற்றுப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். ஏனென்றால், இவற்றை பல்வேறு மாநிலங்களில் சரிவர கடைபிடிக்காத காரணத்தால் நோய்ப் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததன் மூலமாகவும், அரசு அறிவித்த அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகம் சரியாக கடைபிடித்ததன் மூலமாகவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கியதன் மூலமாகவும் இந்நோய்ப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. இது மேலும் குறைந்து இயல்பு நிலை திரும்புவதற்கு அரசால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்போடு மீண்டும், மீண்டும் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.


பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் நோய்ப் பரவல் முழுவதும் தடுக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். நோய்த் தொற்று பரவல் நிலையைப் பொறுத்தவரை, அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்று பரவல் குறைக்கப்பட்டிருந்தாலும், இயல்பு நிலை திரும்புவதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 7,77,616 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 7,54,826 நபர்கள், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் 11,109 நபர்கள், இறப்பு விகிதம் 1.5ரூ. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


அரசை பொறுத்தவரைக்கும், கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக நாம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இன்றைக்கு தொற்று பரவல் படிப்படியாக குறையது, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்றோம்.


இப்பொழுது 1500 நபர்களுக்கும் குறைவாக நோய் தொற்று ஏற்பட்டவர்களுடைய நிலையை நாம் பார்க்கின்றோம். இறப்பவர்களுடைய சதவிகிதம் மிக மிக குறைவாக இருக்கின்றது. ஆக, அரசு எடுத்த நடவடிக்கைக்கு பக்கபலமாக விளங்கிய அனைத்து அரசு உயர் அலுவலர்களுக்கும், அதற்கு ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post