அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது: யுஜிசி திட்டவட்டம்
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கொரோனோ பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத் தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.இதற்கு பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது. யுஜிசி தரப்பில், 'இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம். அரியர் தேர்வுகளை ரத்து செய்வதில் தங்களுக்கு உடன்பாடில்லை' எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நவ.,20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வழக்கறிஞர் ராம்குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளதாகவும், தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது.இந்த மனு மீதான விசாரணை இன்று (நவ.,18) நடைபெற்றது.
அதில், 'கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது. அரியர் தேர்வுகள் கண்டிப்பாக நடத்த வேண்டும்,' என யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்தது. பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், 'இந்த வழக்கு, அரியர் மாணவர்களை தேர்ச்சியடைய செய்ததை எதிர்த்த வழக்குடன் சேர்த்து நவ.,20ல் விசாரிக்கப்படும். வழக்கு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் விடுக்கிறது,' என தெரிவித்தனர்.
Post a Comment