Title of the document
பெற்றோர் தாமாக முன்வந்து தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின்  பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில்,தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை சட்டவிரோதமானது .   மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் மூலம் தான் தனியார்  பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம்  வழங்க முடியும். மேலும் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாககடந்த 3 மாதங்களாக பள்ளிகள் இயங்கவில்லை.

ஆனால் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தனியார் பள்ளிகள் ஊதியம் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வசூலிக்க தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கினால் தான் ஆசிரியர்களுக்கும்,பணியர்களுக்கும் ஊதியம் வழங்கமுடியும்.எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.மேலும்  வழக்கு முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வசூலிக்காமல் ஆசிரியர் உள்ளிட்டோருக்கு எப்படி ஊதியம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், தமிழக அரசு , தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்துமாறு  பெற்றோர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று தான்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதே நேரத்தில் பெற்றோர்கள் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை. மேலும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கான ரூ. 248 கோடியே 76 லட்சம்  ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையைப் பயன்படுத்தி மாதங்களுக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 3-4 மாதங்களுக்கு ஊதியம் வழங்கலாம்.  மும்பை உள்ளிட்ட மாநிலங்களில்  தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தவணைமுறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரி தனியார் பள்ளி சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தனியார் பள்ளிகளின் இந்த கோரிக்கையை பரிசீலித்து தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பான திட்டத்தை விரைவாக வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை  வரும் ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post