கொரோனா பேரிடர் காலம் என்பதால் அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்யுங்கள்': நாடு முழுவதும் வைரலாகும் #Cancel_Exam2020 ஹாஷ்டாக்
நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக வலைதளங்களில் #Cancel_Exam2020 என்ற பிரச்சாரத்தைக் மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆகையால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் 1-9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு கட்டாய தேர்ச்சி அறிவிக்கப்பட்டது, இதே போல தமிழகம் உட்பட சில மாநிலங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பும் வெளியாகி வருகிறது.
அதை போல், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி கல்வி நிறுவனங்கள் தேர்வுகள் இல்லாமலேயே தங்களின் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடிவெடுத்தன.
எனினும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அவை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலைக் கல்லூரி மாணவர்கள், தங்கள் இறுதியாண்டு அல்லது இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பேரிடர்க் காலத்தை முன்னிட்டு தேர்வுகள் இல்லாமலேயே அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்றும் தங்களின் கல்லூரிகளை வலியுறுத்தி உள்ளனர்.
மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், சொந்த ஊர் சென்றவர்களால் புத்தகங்களை எடுத்துச் செல்ல முடியவில்லை என்றும் தேர்வுக்கு முழுமையாகத் தயாராகும் சூழலும் தற்போது இல்லை என்றும் மாணவர்கள் தரப்பில்,கூறப்படுகிறது.
இதை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள பல்வேறு மாநில மாணவர்கள், சமூக வலைதளங்களில் #Cancel_Exam2020 என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்
Post a Comment