Title of the document


உலக வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மோசமான, உலகம் தழுவிய தொற்று நோய்களிலேயே மிக மோசமானது 1918ல் ஏற்பட்ட ஸ்பேனிஷ் இன்ஃபுளூயன்சாதான். உலக மக்கள் தொகையே 200 கோடியாக இருந்த அந்த காலகட்டத்தில் 50 கோடி பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டது. பலகோடி பேர் உயிரிழந்தனர்.


அந்த காலத்தில் வெளியான விக்ஸ் வேபோரப் விளம்பரம் ஒன்றில் அமைதியாக இருக்கும்படியும், மலமிளக்கி சாப்பிடும்படியும், விக்ஸ் தடவும்படியும் 'அறிவுரைகள்' செய்யப்பட்டிருந்தது.
விக்ஸ் மட்டுமல்ல, விக்சுக்குப் போட்டியாக பல 'அற்புத சுகமளிக்கும்' மருந்துகள் சந்தையில் தோன்றி வியாபாரம் செய்யத் தொடங்கின. மில்லர்ஸ் ஆன்டிசெப்டிக் பாம்பு எண்ணெய், டாக்டர் பெல்ஸ் பைன் டார் தேன், ஷென்க்ஸ் மாண்ட்ரேக் மாத்திரைகள், டாக்டர் ஜோன்ஸ் தைலம், ஹில்ஸ் கஸ்கரா குனைன் புரோமைட் போன்றவை அவற்றில் சில.
இப்போதும் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை. ஸ்பானிஷ் இன்ஃப்ளூயன்சா தொற்றுக்கும், கோவிட்-19 தொற்றுக்கும் இடையில் ஒரு நூற்றாண்டுகால இடைவெளி. இந்த இடைவெளியில் ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனாலும் இன்றும் கேள்விக்குரிய பல மருந்துக் கலவைகள், நாட்டு மருத்துவ சிகிச்சைகள் நோயெதிர்ப்பை ஊக்குவிக்கும் என பிரசாரம் செய்யப்படுகிறது.


சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுவரும் இது தொடர்பான புரளிகளில் சுய இன்பம் செய்துகொள்வது கொரோனாவைத் தடுக்கும் என்ற புரளி விநோதமானது. வழக்கம்போலவே, ஊட்டச்சத்து அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படுகின்றன. 
விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமுள்ள உணவுகளை அதிகம் உண்ணும்படி இந்த அறிவுரைகள் வருகின்றன. பல போலி அறிவியலாளர்கள் கொம்பூச்சா, புரோபயாட்டிக் உணவு, போன்ற நவநாகரிக உணவுகளை உட்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள்.
சிவப்பு மிளகாயும், கிரீன் டீயும் கொரோனா வராமல் தடுக்க முகக் கவசத்தைவிட அதிகமாக உதவும் என்று ஒரு ஆலோசனை பகிரப்படுகிறது. இது மோசடி. ஏனெனில் சிலவகை முகக்கவசங்களை அணிவதால் சுவாசப்பாதையில் வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு ஐந்தில் ஒருமடங்கு குறையும்.


நோயெதிர்ப்பு சக்தி ஊக்கம் பெறுவது என ஏதுமில்லை
மாத்திரைகள், நாகரிக அதிசக்தி உணவுகள், உடல் நலப் பழக்கங்கள் ஆகியவற்றின் உதவியோடு எதிர்ப்பு ஆற்றலை குறுக்கு வழியில் உருவாக்கமுடியும் என நினைப்பது ஒரு மூடநம்பிக்கை. உண்மையில் நமது நோயெதிர்ப்பு அமைப்பை ஊக்குவிப்பது என்ற கருத்துக்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை.
"நோயெதிர்ப்பு சக்தி என்பது வெவ்வேறு உட்கூறுகளை உடையது" என்கிறார் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் வல்லுநர் அகிகோ இவாசகி. "நம் உடலில் தோல், காற்றோட்டப் பாதைகள், சளிம சவ்வுகள் ஆகியவை தொற்றுக்கு எதிர்ப்பரணாக அமைந்துள்ளன. இந்த அரண்களைக் கடந்து வைரஸ் உள்ளே புகுந்துவிட்டால் உடலின் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு எதிர்வினை தூண்டப்படும்" என்கிறார் அவர். 
இந்த உள்ளார்ந்த எதிர்வினை என்பது வேதிப்பொருள்கள், உயிரணுக்கள் ஆகியவை எச்சரிக்கை எழுப்பி, உள்ளே புகுந்த வைரசை எதிர்த்துப் போரிட்டு அழிப்பதே ஆகும்.
"அது போதுமானதாக இல்லாதபோது, தகவமைப்பு எதிர்ப்பாற்றல் என்ற ஒன்றை நம் உடல் தூண்டிவிடும்" என்கிறார் அவர். இது ஆன்டிபாடிஸ் எனப்படும் எதிர்ப்பான்களை உருவாக்கும். 
இது நடக்க சில நாள்கள் முதல் வாரங்கள் வகை ஆகலாம். இப்படி உருவாகும் தகவமைப்பு நோயெதிர்ப்பு குறிப்பிட்ட வகை நோய் நுண்மியை மட்டுமே தாக்கும். "எடுத்துக்காட்டாக, கோவிட்-19 நோயை எதிர்க்கும் T செல்கள் இன்ஃபுளுயன்சா அல்லது பேக்டீரியாக்களை தாக்காது" என்கிறார் அவர்.
பெரும்பாலான நோய்த் தொற்றுகள் கடைசியில் தகவமைப்பு நோயெதிர்ப்பு ஆற்றலைத் தூண்டும். ஆனால் இதனை செயல்படுத்த மற்றொரு வழி உள்ளது. அதுதான் தடுப்பு மருந்து. உயிருள்ள அல்லது செத்த நுண்ணியிரிகளை முழுதாகவோ, அவற்றின் சில பகுதிகளையோ உடலுக்குள் நோய் வருவதற்கு முன்பாகவே செலுத்துவதே தடுப்பு மருந்து. இதன் மூலம் உண்மையான நோய் நுண்மிகள் உடலுக்குள் நுழையும்போது அவற்றை அடையாளம் கண்டுகொள்ள உடலுக்குத் தெரியும்.


ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பை ஊக்குவிப்பது என்ற கருத்து, இதுபோன்ற எதிர்வினைகளை, வலுவாக்கவே வாய்ப்புள்ளது. ஆனால் உண்மையில், நீங்கள் இதைச் செய்ய விரும்பமாட்டீர்கள்.
ஜலதோஷம், உடல் வலி, காய்ச்சல், மூளைத் தளர்ச்சி, ஏராளமான சளி, மூக்கொழுகல் ஆகிய அறிகுறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் உண்மையில் வைரஸ் அல்லது பிற நோய் நுண்மிகள் நேரடியாக உருவாக்கியவை அல்ல. நமது உடல் அமைப்பே தூண்டியவை. இவை உள்ளார்ந்த நோயெதிர்ப்பு ஆற்றலின் எதிர்வினையே.
சளி நோய் நுண்மிகளை வெளியே தள்ள உதவுகிறது. காய்ச்சல் நுண்மிகள் பெருக முடியாத அளவுக்கு உடலின் வெப்பநிலையை அதிகரிக்கிறது. நம் நோயெதிர்ப்பு அணுக்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அறிவுறுத்துவதற்காக அழற்சி ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள் நம் உடலின் ரத்தச் சிறை வழியாகப் பயணிக்கும். 


அந்த வேதிப் பயணத்தின் பக்க விளைவே வலிகளும், அசௌகரியங்களும். ஓய்வெடுத்து, உடல் குணமடைய உதவும்படி மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பவும் இந்த அறிகுறிகள் உதவுகின்றன.
இந்த சளிம, வேதி சமிக்ஞைகள் ஆகியவை அழற்சியின் ஒரு பகுதியே. நோய் எதிர்ப்பு வினையின் அடித்தளமும் இவையே. ஆனால், இந்த செயல்முறை களைப்பை ஏற்படுத்துவது. எனவே, இந்த செயல்முறைய நீங்கள் விரும்பமாட்டீர்கள். 
அது எப்படி இருந்தாலும், கோவிட்-19 உள்ளிட்ட பெரும்பாலான வைரஸ்கள் இந்த செயல்முறையை தூண்டவே செய்யும். கொம்பூச்சா, பச்சை தேனீர் அல்லது நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கும் என்று கூறப்படும் வேறு கலவை எதுவானாலும் அவற்றால் உண்மையில் தாக்கம் ஏதாவது இருக்குமானால், அதை உட்கொள்கிறவர்கள் சுகம் பெற்று மிளிரமாட்டார்கள். அதற்குப் பதிலாக மூக்கு ஒழுகிக்கொண்டுதான் இருப்பார்கள்.


ஏனெனில் நோயெதிர்ப்பு அதிகமானால், அழற்சி வினை அதிகரிக்கவே செய்யும். ஆனால் நகைமுரண் என்னவென்றால், நோயெதிர்ப்பு ஆற்றலை இன்னின்ன பொருள்கள் ஊக்குவிக்கும் என்று கூறுகிறவர்கள் அவற்றால் அழற்சி குறையும் என்றே கூறுகிறார்கள்.
நோயெதிர்ப்பின் மற்றொரு கூறாகிய, தகவமைப்பு நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகமானால்கூட அதீத அசௌகரியமே ஏற்படும். எடுத்துக்காட்டாக, ஆர்வம் மிகுந்த நோயெதிர்ப்பு அணுக்கள், தீங்கிழைக்காத மகரந்தம் போன்ற துகள்களை, தீங்கு விளைவிப்பவை போல நடத்துமானால் அதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது. 


ஒவ்வொரு முறை அவை பாதிக்கும் பொருள்களை எதிர்கொள்ளும்போதும் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு வினைகளையும் தூண்டிவிடுகின்றன. இதனால் ஏராளமான தும்மல், கண்ணரிப்பு, சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த 'நோயெதிர்ப்பை ஊக்குவிக்கும்' மருந்துகளை பரிந்துரை செய்கிறவர்கள், சளியும், தும்மலும், ஒவ்வாமையும் அதிகரிக்கவேண்டும் என்று நினைத்து அவற்றைப் பரிந்துரைப்பதில்லை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post