கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு!
கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த மனு:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.பேரிடர் காலத்தில், பொது மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் உள்ளன.
தனியார் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு, 2020 ஏப்ரலில் ஒரு உத்தரவை பிறப்பித்தது.அதில், 2020 - 21ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, நிலுவை தொகையை செலுத்தும்படி, மாணவர்களை, பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது என, கூறப்பட்டுள்ளது.அரசு இப்படி ஒரு உத்தரவு பிறப்பித்தாலும், ஏராளமான பள்ளி, கல்லுாரிகள் கல்வி கட்டணத்தை செலுத்தும்படி வற்புறுத்துகின்றன. இந்தாண்டு, மார்ச், 23 முதல், பள்ளி,கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன.
கல்வி கட்டணம் வசூலிப்பு தொடர்பாக, பெற்றோர் புகார் அளித்தும், அவற்றை பதிவு செய்யவில்லை.
ஆறு மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக்கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, ஊரடங்கு காலத்தில், கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லுாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஆறு மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என, தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது
Post a Comment