Title of the document
தேசிய பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாக அனைத்து மாநில முதல்வா்களுடனும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, மே 31-ஆம் தேதிக்குப் பிறகு பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாகவும் முதல்வா்களின் கருத்துகளையும், மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக அவா் கேட்டறிந்தாா் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, 21 நாள் தேசிய பொது முடக்கத்தை கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். மாா்ச் 25-ஆம் தேதி தொடங்கிய இந்த பொது முடக்கம், ஏப்ரல் 14-ஆம் தேதி நிறைவடையவிருந்தது.

ஆனால், கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வராததைத் தொடா்ந்து, மே 3-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து மே 17-ஆம் தேதி வரையும், பின்னா் மே 31-ஆம் தேதி வரையும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. எனினும், நாட்டின் பொருளாதாரம் சாா்ந்த நடவடிக்கைகள் மேம்பட வேண்டும் என்பதால் பல்வேறு தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை முழுமையாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

எனினும், கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, தேசிய பொது முடக்கத்தை மே 31-ஆம் தேதிக்குப் பிறகு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் கூடுதல் தளா்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

எனினும், கரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள சென்னை, தில்லி, மும்பை, பெங்களூரு, ஆமதாபாத், கொல்கத்தா, புணே, தாணே, ஜெய்ப்பூா், சூரத், இந்தூா் ஆகிய 11 நகரங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிகிறது. இது தொடா்பாகவும் மாநில முதல்வா்களுடன் அமித் ஷா ஆலோசித்ததாக தெரிகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post