Title of the document
வங்கிகள் திங்கள்கிழமை முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி(கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள்)
என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் இந்த விதிமுறைகள் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில அளவிலான வங்கியாளா்கள் கூட்டமைப்பு தமிழக பிரிவின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், வங்கிகளிலும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கிகளின் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. இதன்படி, ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் தற்போது வரை, வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் இருந்து சில தளா்வுகளை அறிவித்துள்ளது. அதில், மாலை 5 மணி வரை, அத்தியாவசிய கடைகள் மற்றும் பிற கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால், வங்கிகள் திங்கள்கிழமை (மே 4-ஆம் தேதி) முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கிக் கிளைகள் 50 சதவீத ஊழியா்களுடன் செயல்பட வேண்டும். மீதம் உள்ள ஊழியா்கள், அதிகாரிகள் சுழற்சி முறையில் வீட்டில் இருந்து பணியாற்றலாம்.
மேலும், வங்கிகள் வழக்கமான சேவைப் பணிகளை வழங்கலாம். ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் இந்த விதிமுறைகள் பொருந்தாது. அதாவது கரோனா பாதித்த கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள வங்கிக் கிளைகள் செயல்படாது. மாவட்ட அதிகாரிகள் வழிகாட்டுதலின் பேரில் அந்தப் பகுதிகளில் வங்கிகள் செயல்படுவது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post