ஒரு குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர் ஆசிரியர் ஆவார். குழந்தையின்
வளமான எதிர்காலத்திற்குப் பள்ளியில் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கும்
பொறுப்பு ஆசிரியருடையதாகும். மாணாக்கர்களை வழிநடத்தும் ஆசிரியர்,
ஆசிரியையாகத் தன்னுடைய பள்ளியில் ஆற்றவேண்டிய கடமைகளை பல்வேறு கோணங்களில்
நன்கு உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.
ஒரு பள்ளியின் தலையாய பொறுப்பு தலைமை ஆசிரியரிடம் உள்ளது. அவர் பிற
ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் அலுவலர். ஒரு பள்ளியின் நலனுக்கு உதவி
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு தலைமையாசிரியருக்கு மிகவும் தேவை. பள்ளியின்
ஒழுங்கு, கட்டுப்பாடு, அதன் முழு வளர்ச்சியில் ஆசிரியர்களின் ஈடுபாடு
தலைமையாசிரியருக்குத் தேவை. பள்ளியின் வளர்ச்சியை மனத்தில் கொண்டு, உதவி
ஆசிரியர்கள், தலைமையாசிரியர் தமக்கு வழங்கிய பணிகளை முழுமனதுடன் செய்தல்
வேண்டும். அங்கணம் ஒத்துழைப்புடன் பணிபுரிதல் ஆசிரியருக்கு மதிப்பும்
மகிழ்ச்சியும் தருவதாகும்.
மாணாக்கர்களின் எதிர்காலம் ஆசிரியர் கையில் என்பதை நாம் நன்கறிவோம். ஒரு
வகுப்பில் பல்வேறு குடும்பப் பின்னணிகளையுடைய மாணாக்கர்கள் ஒருங்கே
அமர்ந்திருப்பர். அவர்களது வாய்ப்புகளும் வளர்ப்புச் சூழ்நிலைகளும்
வெவ்வேறானவை என்பதை வகுப்பிலிருந்து பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் மனதில்
கொள்ள வேண்டும்.
ஆசிரியர் கற்பிக்கும் பாடப்பொருளுடன் மனம் ஒன்றாத நிலையிலும் அவர்கள்
இருக்கலாம். பாடப்பொருள் அனைத்து மாணாக்கர்களையும் சென்றடையாமலும் போகலாம்.
ஒரு சில மாணாக்கர்களே, ஆசிரியரின் எதிர்பார்ப்பின் படி பதில் அளிப்பர்.
ஆசிரியர் சரியான பதில் அளிக்காதவர்களை ஒதுக்கிவிடாமல், அவரவர் முன்னறிவு
நிலைகளை அறிந்து, அனைவரும் கற்றலில் முழுமைபெறத் துணை செய்ய வேண்டும். தனி
மாணாக்கரின் புரிந்து கொள்ளும் திறமையை அறிந்து அனைவர்க்கும் உகந்தவாறு
கற்பித்தல் முறைகளை ஆசிரியர் அமைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தன் பணியிலும் தலைமையாசிரியரிடத்திலும் மாணவர்களிடத்திலும்
பொறுப்புணர்வு மிக்கவராகப் பணி செய்ய வேண்டியது ஆசிரியரின் கடமையாகும்.
Post a Comment