Title of the document
அரசு பணிகள் மற்றும் பதவி உயர்வுக்கு இடஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமையில்லை. இதற்காக மாநில அரசுகளை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2012ல், மாநில அரசின் பொதுப் பணித்துறையில், உதவி இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்காமல் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கு தடை விதிக்க வேண்டும் என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும்படி, மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மாநில அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், நீதிபதிகள், எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு சமீபத்தில் தீர்ப்பளித்தது.

தீர்ப்பில் கூறப்பட்டதாவது:
மாநில அரசுகளின் பணிகளில் இடஒதுக்கீடு அளிக்கும்படி கோருவது அடிப்படை உரிமை அல்ல. அரசு பணியிடங்களில் இடஒதுக்கீடு அளிக்கும்படி, மாநில அரசுகளை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அரசு பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை உறுதி செய்யும் தகவல்கள் இல்லாமல், இடஒதுக்கீடு அளிக்கும்படி அரசை கட்டாயப்படுத்த முடியாது. ஒதுக்கீடு அளிக்கும்படி கோரினால், அதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் மாநில அரசுகளுக்கு இல்லை. இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதிகள், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post