Title of the document
gallerye_012732425_2425735
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும், ஊரக உள்ளாட்சி பகுதிகளில், எவ்விதமான பரபரப்பும் இல்லாமல் இருப்பதற்கு, தேர்தல் நடக்குமா என்ற சந்தேகமே காரணம்.

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மட்டும், 1.18 லட்சம் பதவிகளுக்கு நேரடி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 27, 30ம் தேதிகளில், ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, 2020 ஜனவரி, 2ல் நடக்கிறது. மனு தாக்கல், நாளை மறுநாள்(டிச.,6) துவங்குகிறது.

மனு தாக்கலுக்கான ஏற்பாடுகள், சென்னையை தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமாக தேர்தல் அறிவித்தவுடன், நகர பகுதிகளை விட, ஊரக பகுதிகளில் தேர்தல் களைகட்டி விடும். வீடுகள் தோறும் சென்று, வாக்காளர்களை சந்திப்பது, பொது இடங்களில் கூடி, தேர்தல் நிலவரங்களை பேசுவது வழக்கமாக இருக்கும்.

தேர்தலில் போட்டியிடுபவர்கள், வாக்காளர்களை விழுந்து விழுந்து கவனிப்பர். ஆனால், தேர்தல் அறிவித்த பிறகும், ஊரக உள்ளாட்சிகளில், எந்தவித பரபரப்பும் இல்லாமல் உள்ளது.

தேர்தல் தொடர்பாக, தி.மு.க., உட்பட பல்வேறு தரப்பிலும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால், தேர்தல் ரத்தாகுமோ என்ற சந்தேகம், பொது மக்களுக்கு எழுந்துள்ளது.

ஏன் தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டும் என, தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளவர்கள் பதுங்க ஆரம்பித்து உள்ளனர். தேர்தல் அறிவிப்புக்கு பின், பலர் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர். நாளை, வழக்கின் முடிவை தெரிந்து, களத்தில் இறங்குவதற்கு, அவர்கள் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post