Title of the document
பள்ளி  விண்ணப்பத்தில் ஜாதி, மதம், ஆதார் உள்ளிட்ட விவரங்களை கட்டாயமாக பதிவிட வேண்டும் என வலியுறுத்துவதை தடை செய்யக் கோரிய மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், தொடக்கப் பள்ளி கல்வித் துறை, தமிழக அரசின் முதன்மை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.   மதுரையைச் சேர்ந்த ஜானகி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:    நான், எனது 3 வயது மகளை பள்ளியில் சேர்த்தபோது, பள்ளியில் அளித்த விண்ணப்பத்தில் பல்வேறு விவரங்கள் கோரப்பட்டிருந்தன.    அதில், ஜாதி, மதம், ஆதார் உள்ளிட்ட  சில விவரங்கள் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டிருந்தன.   EDUCATION MANAGEMENT INFORMATION SYSTEM  இல் இது போன்ற விவரங்கள் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால், அனைவரும் ஜாதி, மதம், ஆதார் உள்ளிட்ட விவரங்களை கட்டாயமாக உள்ளீடு செய்யவேண்டியுள்ளது.    இதற்கு முன் 2000ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட  அரசாணைப் படி இந்த விவரங்களை கட்டாயமாக தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    மேலும், இதுதொடர்பாக 2016ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வெளியிட்ட ஒரு தீர்ப்பிலும் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.    ஆனால் இணையதளத்தில் கட்டாயமாகக் கேட்கப்படுவதால், என்னை போன்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டியுள்ளது.    இந்த விவரங்களை கட்டாயம் தெரிவிக்கவேண்டும் என்பது இயற்கை நியதிக்கு எதிரானது மட்டுமன்றி, தனியுரிமையை பாதிக்கும் நடவடிக்கையும் ஆகும். எனவே, பள்ளி கல்வி விண்ணப்பத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த கட்டாய விவரங்களை, விரும்புவோர் மட்டும் பயன்படுத்தும் வகையில் மாற்றவும், இதுகுறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.    இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்எஸ் சுந்தர் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.    அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து  பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், தொடக்கப் பள்ளி கல்வித் துறை இயக்குநர், தமிழக அரசின் முதன்மைச் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post