Title of the document
அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களுக்கு சொந்தமான நிலங்களை கணக்கெடுத்து அனுப்ப வேண்டும் என்று முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஏ.கருப்பசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் வட்டார கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடம் சார்ந்தநிலங்கள் அரசுக்கு சொந்தமானதாக இருந்தால் அதன் விவரங்களை ‘தமிழ் நிலம்’ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.


அதன்படி கல்வி அலுவலகங்களின் கட்டிடங்கள் அரசுக்கு சொந்தமாக இருக்கும்பட்சத்தில் அதன் விவரங்களைத் தயார் செய்து வழங்க வேண்டும். இதுதவிர நிர்வாக சீரமைப்பு நடைமுறைக்கு முன் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களாக செயல்பட்டு வந்த நிலங்களில் கல்வித்துறைக்குச் சொந்தமானவற்றைக் கண்டறிந்து பதிவு செய்ய வேண்டும்.


மேலும், மாவட்ட ஆட்சியர் மூலம் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் செயல்படும் தொடக்கக் கல்வி அலுவலகங்களின் விவரங்களையும் சேகரிக்க வேண்டும். இதேபோல், ஊராட்சி ஒன்றிய, நகராட்சிப் பள்ளிகள் அமைந்துள்ள நிலங்கள் பள்ளிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும், மாவட்டத்தில் இயங்கும் அலுவலகங்கள் கல்வித்துறையின் பெயரில் நிலம் ஒதுக்கப்படவில்லை எனில் அந்த விவரத்தையும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post