Title of the document

சேலம் அருகே அரசுப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் ஓவியம், நடனம், விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் சாதனை படைப்பது கவனம் ஈர்த்துள்ளது. உடல் குறைபாடு என்பது மனிதனின் வெற்றி பயணத்திற்கு ஒரு தடையல்ல.


அதுவும் எங்களுக்கான அடையாளம் தான். கிராமங்களில் ஏராளமான மாற்றுத்திறன் சாதனையாளர்கள் உள்ளனர்.  அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று கூறுவதை விட, தங்கள் மீதான பிறரின் சிந்தனையை மாற்றும் திறனாளிகள் என்றே கூறவேண்டும்.


அந்த வகையில் ஓவியம், நடனம், விளையாட்டு  என்று எங்களால் முடிந்த சாதனைகளை படைத்து வருகிறோம் என்று ெநகிழ்கின்றனர் ேசலம் அருேகயுள்ள வலசையூர் அரசுப்பள்ளி மாணவர்கள்.


 அனைவருக்கும் இடைநிலை கல்வி  திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


 இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள 21 ஒன்றியங்களில் 300  பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 580க்கும் அதிகமான மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் சேலம் வலசையூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும்  மாணவர்கள், கலை, ஓவியம், விளையாட்டு என அசத்தி வருகின்றனர்.


 கண் பார்வையற்ற 6 பேர், காதுகேளாதோர் 9 பேர், வாய் பேசமுடியாத, காது கேளாத மற்றும் கைகளை இழந்த ஒருவர், உள்பட 17 மாற்றுத்திறனாளிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.  இவர்களில், 2 பேர் எஸ்எஸ்எல்சி, 3 பேர் பிளஸ் 1 மற்றும் 8 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர்.


 இப்பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் ராஜா என்பவர், இரு கைகளும்  செயலிழந்த நிலையில், வாய் பேசமுடியாத, காது கேட்கமுடியாத துயரத்தை கொண்டுள்ளார்.


 ஆனால், திறமைக்கு இதெல்லாம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், தனது இரு  கால்களால் ஓவியங்களை தீட்டி அசத்துகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் இப்பள்ளியில் சேர்ந்துள்ளார்.


 விரைவில், மாநில அளவிலான ஓவியப்போட்டியில் பங்கேற்கவுள்ள இவரின்  திறமையை பாராட்டி,  கலெக்டர் ரோகிணி பரிசும் வழங்கியுள்ளார்.


சக மாணவர்களுடன் ஓட்டத்திலும் முந்தும் இவர், பயிற்சியாளர்களே தடுமாறும் பத்மாசனத்தை அசால்ட்டாக செய்து  முடிக்கிறார்.



மாற்றுத்திறன் மாணவர்கள் சாதிக்க, விளையாட்டு ஒன்றும் விதிவிலக்கல்ல என மார்தட்டுகிறார், இதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கு மாணவர் கவுதம். பார்வையற்றவரான இவர்,  சத்தமில்லாமல் ஜூடோ போட்டியில் சாதிக்கிறார்.


கடந்த மாதம் உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற இவர்,  வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். கலைத்துறையில் சாதிக்க விரும்பும் கேசவமூர்த்தி நடனத்தில், வியக்க வைக்கிறார்.


பிளஸ் 2 படித்து வரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், உலக மாற்றுத்திறனாளிகள்  தினவிழாவில், நடனமாடி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.


 இதேபோல், பிளஸ் 2 படிக்கும் காதுகேளாத, வாய்பேச முடியாத மாணவன் மகேந்திரன் கம்யூட்டரை கையாள்வதில்,  ஆசிரியரையே மிரள வைக்கிறார். 9ம் வகுப்பு படிக்கும் பிரேம்குமார் என்பவரும், ஓவியத்தில் தனித்திறனை கொண்டு சிறந்து விளங்குகிறார்.


 இதுகுறித்து மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர் அமிர்தவள்ளி கூறுகையில், ‘‘கடந்த 10 வருடமாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன்.


 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு,  பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலவழிகளை காட்டும் தூண்டுகோலாக இருந்து வருகின்றனர்.


 மாற்றுத்திறனாளிகளை தனிமைப்படுத்த கூடாது என்ற எண்ணத்தை கொண்டுள்ள அவர்கள், ஒன்றாக விளையாட்டு, உணவு பரிமாற்றம் என ஊக்கப்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.


இப் பள்ளியை விட்டு வெளியே சென்ற பலர் எம்.காம்., பி.காம்., மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து, நிரந்தர பணியில் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் முயற்சிகளுக்கு துணையாக  நின்றால், நாளைய சாதனையாளர்களாக மிளிர்கின்றனர். இந்த எண்ணம் அனைவருக்கும் இயல்பாக ஏற்பட வேண்டும்,’’ என்றார்.


கூடுதல் உபகரணங்கள் தேவை


மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்பட்டு வரும் பல பள்ளிகளில், தனியாக ஆய்வக வசதிகள் இல்லை.


 பாதுகாப்பற்ற கட்டிடங்களில் இப்பிரிவு செயல்பட்டு வருவதால், கற்றல் உபகரணங்களுக்கு  உத்திரவாதம் இல்லாத நிலை காணப்படுகிறது. இதேபோல், பார்வையற்ற மாணவர்களுக்கு நிறைய கற்றல் உபகரணங்கள் உள்ளன.


ஆனால், காதுகேளாதவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள   ஒருசில கருவிகள், அந்த மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, கூடுதலாக உபகரணங்களை வழங்க வேண்டும் என்பதும் மாணவர்களின் எதிர்பார்ப்பு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post