Title of the document

ஆசிரியர் கவுன்சலிங்கில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், கல்வித்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: 2018-19ம் ஆண்டிற்கான ஆசிரியர் பொது கலந்தாய்வு விதிப்படி நடக்கவில்லை. விதிகளை மீறி பல மாவட்டங்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய பலர் பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து இடமாறுதல் பெற்றுள்ளனர்.

எனவே 2018-19ம் கல்வி ஆண்டில் கவுன்சலிங்கில் நடந்த விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்வித்துறை இயக்குனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த அறிக்கையில் திருப்தி இல்லை. எனவே, இடமாறுதல் பெற்றவர்களின் விபரங்கள், காரணங்கள் உள்ளிட்டவை குறித்த விபரங்களுடன் கல்வித்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜன.28க்கு தள்ளி வைத்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post