ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் ஊராட்சி செம்மம் பாளையத்தில் உள்ள கால்நடை கிளை மருத்துவ மனை தரம் உயர்த்தப்பட்டு திறப்பு விழா நடந்தது. கூடுதலாக ஒரு உதவி மருத்துவர் கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதன் திறப்பு விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்ட மருத்துவ மனையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம், கோழி வளர்ச்சி திட்டம், கால்நடை பசுந்தீவன திட்டம், கால்நடை காப்பீடு திட்டம் விலையில்லா ஆடுகள் திட்டமும் செயல்படுத்தப்படும்.
பள்ளி கல்வி துறையில் மாணவ-மாணவிகள் பயன்படும் வகையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 1-ந்தேதி முதல் அரசு பள்ளியில் பிரிகே.ஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும். அடுத்து வரும் கல்வி ஆண்டில் ஆரம்பம் முதலே இலவச சைக்கிள் வழங்கப்படும். இந்த ஆண்டு 11 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. பெற்றோர்கள் ஒரு ரூபாய் கூட கல்விக்காக கொடுக்க வேண்டியது இல்லை. அனைத்தும் அரசே ஏற்கும்.
Post a Comment