![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3jO7riTswvoBRdU3f3OnrQItgKKqr9ettuBunvT16ei_tG8l2LBCfqgXJmfZSfbThZM1XLW4NIb8WViha98T0fJx3IuTf_z9rYg9jdjwjFE5FhV7z8BejcE6fHamTWCttXjpMkF1-b_i9/s200/1543072082054.jpg)
புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு தேர்வுக்கூட அரங்கில் கஜா புயல் பாதிப்பு சம்பந்தமாக வட்டார கல்வி அலுவலர்களுக்கு மீளாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது...
கூட்டத்தினை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பள்ளி வகுப்பறைகளின் விபரத்தினை சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியர்களிடம் புகைப்படமாக பெற்று மாவட்ட கல்வி அலுவலகத்தின் வாயிலாக முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உடனடியாக சமர்பிக்க வேண்டும்.மாணவர்களுக்கு
தொற்று நோய் வராமல் இருக்க பொதுமருத்துவ முகாம் தேவை எனில் அத்தகைய இடங்களை தேர்வு செய்து நீங்கள் தெரிவித்தால் அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் .
கஜாபுயலினால் பாதிப்படைந்த பள்ளியின் மராமத்துப் பணிகளை தலைமைஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரிய கழகத்தினர், கிராமகல்விக் குழு உறுப்பினர்கள்,பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மூலம் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஒன்றிய ஆணையர்களை அணுகி சரி செய்ய முயற்சிகள் எடுக்க வேண்டும்..அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் தங்களது செல்போன்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும். கஜாபுயல் பாதிப்பால் சேதமடைந்த பாடப்புத்தகங்கள்,நோட்டுகள்,சீருடைகள் மாணவர்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குஉடனடியாக வழங்க மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.எனவே வட்டாரக்கல்வி அலுவலர்கள் அந்தந்த ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் கஜா புயலினால் சேதமடைந்த பாடப்புத்தகங்கள்,நோட்டுகள்,சீருடைகள் பற்றிய விபரத்தினை சம்பந்தப்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் தேவைப்பட்டியலை நீங்கள் பெற்று வழங்கியுள்ளதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாமலை ரஞ்சன்,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜீவானந்தம்,கபிலன், பள்ளி துணை ஆய்வாளர்கள் கி.வேலுச்சாமி,ஜெயராமன் மற்றும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment