![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEil2Ywfftc0zMf2bAyOJHiLBbAJQvSyYkFXMN6sgTDXALMuhb-l4MbshxXweFSK3pCifZMCzXEARzJPWwKz1WG1Kp3yKvn6uyVtCBXbLkA6PLvJeVIMEk0B90L7JoAzT2gIOMtwty8My2w/s200/20181121_015937.jpg)
அரியபித்தான்பட்டியில் ஆரம்பப்பள்ளி கட்டடம் இடிந்ததால், வகுப்பறையின்றி பள்ளி மாணவர்கள் மரநிழலில் அமர்ந்து படிக்கின்றனர்.
வேடசந்துார் அருகே உள்ள குக்கிராமம் அரியபித்தான்பட்டி. இங்குள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் நாற்பது மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்தப்பள்ளி கட்டடம் 1990 களில் கட்டப்பட்டதால், மேற்கூரையின் அடிப்பகுதியில் பாளம் பாளமாக வெடித்து, காரை பெயர்ந்து கீழே விழுந்தன. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், கட்டடம் கடந்த மாதம் இடிக்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் வேறு கட்டடம் எதுவும் கிடையாது. இருந்த கட்டடத்தையும் இடித்து விட்டதால் மாணவரும், ஆசிரியரும் செய்வதறியாது திகைத்தனர்.இதனால் பள்ளி மாணவ, மாணவியர் அங்குள்ள மரநிழலில் அமர்ந்து படிக்கின்றனர். அவ்விடத்தையே வகுப்பறையாகக் கொண்டு, இரண்டு ஆசிரியைகளும் பாடம் கற்பிக்கின்றனர்.
திறந்தவெளி என்பதால், மழைத்துளி விழத் துவங்கினாலே மாணவர்கள் எழுந்துல, ஊருக்குள் இருக்கும் நாடக மேடைக்குத்தான் செல்கின்றனர்.அங்கேயே உட்கார வைத்து பாடம் நடத்தலாம் என்றாலும், மழைச் சாரல் பொழியும்போது அங்கும் உட்கார முடியாத நிலை உள்ளது. இதனால் தொடர் மழையை நினைத்தால், பள்ளியின் நிலையை நினைத்தே பார்க்க முடியவில்லை. அப்புறமென்ன விடுமுறைதான். இந்நிலையில் நான்கு மாணவர்கள் காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வரவில்லை என்கின்றனர்.
இதே நிலை நீடித்தால் அடுத்த கல்வியாண்டில் மாணவர்கள் வருகை வெகுவாக குறையும். மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கான கட்டடத்தை விரைந்து கட்ட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
Post a Comment