Title of the document


ஒரத்தநாடு அருகே உள்ள கிராமம் ஒன்றில், மாணவர்களிடையே  சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், அப்பகுதி மக்கள்  அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குத்  தங்கள் சொந்தச் செலவில் அஞ்சலக வங்கியில் சேமிப்புக் கணக்கைத்  தொடங்கி, அதற்கான பாஸ் புத்தகத்தைக் கொடுத்து  அசத்தியிருக்கின்றனர். அவை,  நிச்சயம் மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் உற்சாகமாகக் கூறுகின்றனர்.தஞ்சவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே  உள்ளது பின்னையூர். இந்தக் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை  மொத்தம் 81 மாணவ மாணவிகள் படித்துவருகிறார்கள். இவர்கள் அனைவரும் பின்னையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் விவசாயிகள். இந்தக் கிராமத்தினர், அங்குள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த, பல முயற்சிகளைச் செய்துவருகின்றனர். மேலும், மாணவ மாணவிகளுக்கு  சிறு வயதில் இருந்தே எதிர்கால கல்வியைக் கருத்தில்கொண்டு, சேமிப்புப் பழக்கத்தை  ஏற்படுத்த முடிவுசெய்தனர். இதற்காக, அந்த ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான ராமசந்திரன், பள்ளியில் அனுமதி பெற்று, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான செலவை கிராம மக்களிடம் வசூல்செய்து, 81 மாணவர்களுக்கும் இலவசமாக அஞ்சலக வங்கிக் கணக்கைத் தொடங்கினார்கள். அதற்கான பாஸ் புத்தகத்தை, பள்ளித் தலைமை ஆசிரியர் அம்பிகா மற்றும் ஆசிரியர்கள் அனைவருடன் சேர்ந்து மாணவர்களிடம் ஒப்படைத்தனர். இதற்கு ஆசிரியர்கள்  பாராட்டு தெரிவித்தனர்.இதுகுறித்து ராமசந்திரன் கூறியதாவது, ''எங்க பகுதியில் அனைவரும் விவசாயிகள்தான். எப்போதும் விவசாயி வறுமையில்தான் வாழ்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ விவசாயி வீட்டுப் பிள்ளைகள் நன்றாகப் படித்தும் மேற்படிப்பு படிக்க பணம் இல்லாததால், படிக்கவில்லை. எங்கள் பள்ளியில்  படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சேமிக்கும்  பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, ஒரு மாணவருக்கு 100 ரூபாய் வீதம் 81 மாணவ  மாணவிகளின் பெயரில் தனித் தனியாக அஞ்சலக வங்கியில் சேமிப்புக் கணக்கைத்  தொடங்கி, அதன் பாஸ் புத்தகத்தை  அவர்களிடம் கொடுத்தோம். மேலும், எதிர்கால கல்விக்கு இந்த சேமிப்பு எவ்வளவு அவசியம் என்பதையும் எடுத்துக் கூறினோம். இது ஒரு முதல் முயற்சிதான். இதற்காக, எங்க ஊரைச் சேர்ந்த கருணாநிதி, திருந்தையன் ஆகியோர் 8,100  ரூபாய் பணம் கொடுத்தனர். நானும் எனது பங்கை வழங்கியுள்ளேன். இதைத்  தொடர்ந்து, அடுத்தடுத்த மாணவ மாணவிகளின் சேமிப்புக் கணக்கில் பணத்தைச் செலுத்துவதற்கு பலரும் முன்வருகிறார்கள். அடுத்ததாக உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 200 பேருக்கும் சேமிப்புக் கணக்கு  தொடங்கிக் கொடுக்க உள்ளோம்'' என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post