Title of the document
டெங்கு ஒழிப்பில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில், சுகாதாரத் துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலின் தாக்கம் பொதுமக்களை மிரள வைத்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு காரணமான, 'ஏடிஸ்' வகை கொசுக்களின், புழு நிலையிலான 'லார்வா'க்களை கண்டறிந்து ஒழிப்பது, சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து, கொசுப் புழுக்களை ஒழிக்கும் புதிய முயற்சியில், சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி கூறியதாவது:மாணவர்களின் வீட்டிலோ, அருகிலோ, தெருக்களிலோ, தேங்கி இருக்கும் நன்னீரை ஆய்வு செய்து, அதில் புழுக்கள் இருந்தால், சேகரித்து வரும்படி, ஆசிரியர்கள் வழியாக, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு, அவர்கள் சேகரித்து வரும் புழுக்களின் தன்மைகளை, பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்வர்.அவை, எந்த மாதிரியான நோய்களை ஏற்படுத்தும்; அதிலிருந்து தப்பிக்க எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்; நோய் வந்த பின், எவ்வாறு தங்களையும், சுற்றத்தாரையும் பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள், மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.இதுதவிர, கொசு புழுவை சேகரித்து வரும், மாணவர்களை, மற்ற மாணவர்கள் முன்னிலையில் பாராட்டி, ஊக்கப்படுத்துகிறோம். இதனால், கொசுப்புழுக்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு, அழிக்கப்படுகிறது. அதேபோல, சுத்தமாக கை கழுவுவதன் வாயிலாக, பன்றி காய்ச்சலில் இருந்து, 80 சதவீதம் தப்பிக்க முடியும். இது குறித்து எல்லாம், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post