சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் கல்விக் கட்டண நிர்ணயக்குழு கூட்டம் இன்று (24.10.2018) கூடியது. இந்தக் கூட்டத்துக்கு கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மற்றும் முன்னணி தனியார் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தனியார் பொறியியல் கல்லூரியின் நிர்வாகிகள், 'பொறியியல் கல்லூரியில் பணியாற்றுபவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டுமென்றால், பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டியது அவசியம். உடனடியாகப் பொறியியல் கல்விக் கட்டணத்தை உயர்த்துவதற்கான ஆணையைத் தமிழக அரசு வெளியிட வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கட்டண நிர்ணய குழு, `அடுத்த கல்வியாண்டில் தொடக்கத்தில் புதிய கட்டணம் குறித்து முடிவெடுக்கப்படும்' எனக் கருத்து தெரிவித்துள்ளது. தற்போது, தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்குக் கட்டணமாக ரூ.55,000 பெறப்படுவது குறிப்பிடத்தக்கது