ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சலிங் 24 மற்றும் 25ம் தேதிகளில் ஆன்லைன் மூலம் நடக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேனிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டு 24ம் தேதி கவுன்சலிங் நடக்கிறது. அதேபோல, பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கும் பொதுமாறுதல் கவுன்சலிங் 25ம் தேதி நடக்கிறது.
பொது மாறுதல்கள் மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்துக்குள் வழங்கப்பட உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் மாறுதல் கேட்டு பதிவு செய்த பதவிகளுக்கு மட்டும் ஆதிதிராவிடர் நல இயக்குநரின் நேரடிப் பார்வையில் அந்தந்த மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கவுன்சலிங் நடக்கும். இதையடுத்து, காலிப்பணியிட விவரங்கள் மற்றும் பொது மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் தகுதியான நபர்களின் பட்டியல்கள் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு 11ம் தேதி அனுப்பி வைக்கப்படும். இந்த விவரங்களை பெறும் அலுவலர்கள் பட்டியல்களை கவுன்சலிங் நடக்கும் அலுவலகத்தில் ஒட்டி வைக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Post a Comment