கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணினி ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்
தமிழக பள்ளிக் கல்வித் துறை மூலம் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் மட்டும் வெளியாகின்றன. ஆனால் செயல்வடிவம் பெறவில்லை. கணினி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை
கடந்த 2017-ஆம் ஆண்டு அரசாணை மூலம் அறிவிக்கப்பட்ட 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களோ அல்லது பெற்றோர் -ஆசிரியர் கழகத்தின் மூலம் நிரப்பப்படும் தற்காலிக கணினி ஆசிரியர் பணியிடங்களோ நிரப்பாமல் ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய ஆசிரியர் தேர்வுகளின் மூலம் கணினி ஆசிரியர்களை நிரந்தரமாக பணி நியமனம் செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கணினி ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது
இதுதொடர்பாக கல்வியாளர் ஒருவர் கூறியதாவது
தமிழக அரசு கணினி ஆசிரியர்களின் கல்வித் தகுதியை தாழ்த்தி மதிப்பீடு செய்யக் கூடாது
மற்ற ஆசிரியர்களைப் போல கணினி ஆசிரியர்களும் கல்வித் தரத்தோடு தான் இருக்கின்றனர். அதனால் தமிழக அரசு கணினி ஆசிரியர்கள் விவகாரத்தில் உடனடியாக பரிசீலனை செய்து பணிநியமனம் செய்ய வேண்டும்
மேலும், தேர்வின் மூலம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு காலதாமதமாகும் பட்சத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும் என்றனர்
மேலும், தமிழகத்தில் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தை அறிவித்திருக்கும் தமிழக அரசு, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகளை நிரந்தரமாக பணி நியமனம் செய்ய வேண்டும்
பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கணினி பயன்பாட்டியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு உரிய கல்வித் தகுதியுடைய பி.எட்., கணினி ஆசிரியர்களை நிரந்தரமாக பணிநியமனம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதேபோல வரும் கல்வியாண்டில் (2019-2020) பிளஸ் 2 வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த 3 பாடப் பிரிவுகளுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
நடப்புக் கல்வியாண்டில் (2018-2019) பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு கணினி ஆசிரியர்களை துரித கதியில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
பல அரசுப் பள்ளிகளில், மேல்நிலை வகுப்புகளுக்கு "கணினி அறிவியல்' பாடப்பிரிவு இன்னும் தொடங்கப்படவில்லை
அங்கு கணினி அறிவியல் பாடப்பிரிவை புதிதாக தொடங்கி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணினி ஆசிரியர்களைப் பணிநியமனம் செய்ய வேண்டும்
6 முதல் 10 வகுப்புகளுக்கு புதிதாகக் கொண்டு வரப்படும் "கணினி அறிவியல்' பாடத்திட்டத்துக்கு பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் மாநில செயலாளர் டி. அகிலன் கூறியதாவது
8 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் பணியை நம்பி பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்
தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆனால் இதுவரை கணினி அறிவியல் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படவில்லை
எங்களுடைய நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றார் அவர்
Post a Comment